"மர்யமும் நானே! ஈஸாவும் நானே" என்று ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் கூறினார்களா...? உண்மை என்ன?

மர்யமும் நானே! ஈஸாவும் நானே என்று கிஷ்தி நூஹ் என்ற நூலில் பக்கம் 68 இல் கூறியுள்ளாரே இவர் மன நோயாளியா, என்று ஒரு சிலர் ஆட்சேபனை செய்கின்றனர்.
 நம் பதில். 1. நபிமார்களை அவர்களின் பகைவர்கள் கிறுக்கன், பைத்தியம், மனநோயாளி என்று அழைத்ததாகவும், அந்நபிமார்கள் பைத்தியம் இல்லை என்றும் அல்லாஹ் கூறுவதாக திருக்குர்ஆன் கூறுகிறது ( 15:7, 26:28, 37:37, 44:15, 51:40, 51:53, 52:30, 54:10, 68:3, 68:52, 81:23) ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றி வந்த உம்மத்தி நபியாகிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களை அவர்களின் எதிரிகள் மன நோயாளி என்று கூறுவதால், ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் உண்மையாளர் என்றும் அவர்களை இவ்வாறு கூறி அழைப்பவர்கள் ஒரு நபியின் எதிரி என்றும் உறுதியாகிறது. 2) ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களுக்கு வந்த வஹியில், இன்னீ முஹீனுன் மன் அராத இஹான(த்)தக. (தத்கிரா). உம்மை இழிவுபடுத்த
நாடுவோரை நான் இழிவுபடுத்துவேன் என்று என்று அல்லாஹ் கூறினான். ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களை எதிர்ப்பவர்கள் கடந்த பல ஆண்டுகளாக வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களை பல்வேறு இழிவான சொற்களைக் கொண்டு பேசியும் எழுதியும் வருகிறார்கள். உதாரணத்திற்கு மேற்சொன்ன முன்னறிவிப்பின் அடிப்படையில் சகோ பி.ஜே யை கூறலாம். (சகோ பி.ஜெ வை கூற காரணம், அவரும் அவரது சஹாக்களும் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களை மிக கீழ்தரமாக, அவதூறாக ஏசி பேசி வருகின்றனர் ஆகவேதான் இவரது பெயரை உபயோகித்துள்ளோம்) அவரை குறித்து அவரது பழைய நண்பரும் இன்றைய எதிரியுமான ஜவாஹிருல்லாஹ் கூறிய கூற்றைப் பாருங்கள். நரேந்திர மோடியை விட கருணாநிதி மோசமானவர் என்று தவ்ஹீது ஜமாத்தைச் சேர்ந்த ஜைனுல் ஆப்தீன் பேசி வருகிறார். அவர் ஒரு மன நோயாளி என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. (த மு மு க மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லாஹ் ஆதாரம்: தினகரன் 1.5.2006 பக்கம் 2) அவரது முன்னால் நண்பரான அபூ அப்தில்லாஹ் கூறியிருப்பதைப் பாருங்கள்: பி.ஜே ஒரு கொள்ளைக்காரன்: பச்சைப் பொய்யன்: பித்தலாட்டக்காரன்: தில்லுமுல்லு செய்பவன்: பி.ஜே ஒரு பரம அயோக்கியன்: அவதூறுகளை அள்ளி வீசுபவன்: நாஸ்திகன்: ஏமாற்றி வயிறு வளர்ப்பவன்: அமானித மோசக்காரன்: கேடுகெட்டவன்: அபூஜஹிலைவிட கொடியவன்: தஜ்ஜால் என்று எழுதியுள்ளார். (ஆதாரம் அந்நஜாத், ஜூன், ஆகஸ்ட், டிசம்பர் 2005 இதழ்கள்) இந்த முன்னறிவிப்பு பி.ஜே யின் விசயத்தில், அவரது ஆரம்ப கால நண்பர்களின் கூற்று மூலமும் நிறைவேறிவிட்டது என்பதைக் கண்டீர்கள். இந்த முன்னறிவிப்பு இதைவிட அதிகமாக நிறைவேறுவதை உலகம் கண்டு கொள்ளும், கண்டும் கொண்டும் இருக்கிறது. இல்லா மாஷா அல்லாஹ். 3) ஒவ்வொரு நபியின் காலத்திலும் அவர்களின் எதிரிகள் நபிமார்கள் கூறுகின்ற ஆழிய ஞானமும், நுட்பமும் கொண்ட கருத்துக்களை உணராதவர்கள் அவரைப் பைத்தியம் என்பது நடைமுறையாகும். 4) அல்லாஹ் எல்லா வகையிலும் தெளிந்த ஞானம் உடையவர்களை தான் நபிமார்களாக ரஸுல்மார்களாகத் தேர்ந்தெடுக்கிறான். ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களை எதிர்க்கும் எதிரிகள் இவ்வாறு எழுதியும், பேசியும் வருகிறார்கள் அதாவது "மர்யமும் நானே! ஈஸாவும் நானே என்று மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) கூறியுள்ளார் என்பதாகும்.
இதற்கு நம் விளக்கம்: மர்யம் என்பது பெண்ணின் பெயர் – மிர்ஸா குலாம் அஹ்மது எப்படி மர்யமாக முடியும் என்பதுதான் ஆட்சேபனை செய்பவர்களின் பார்வை. இவ்வாறு ஆட்சேபனை செய்பவர்களுக்கு திருக்குர்ஆன் ஞானமோ, நபிமொழி ஞானமோ, மொழியறிவோ, பகுத்தறிவோ இல்லை என இவர்களது இவ்வாறான ஆட்சேபனையிலிருந்து  தெரிகிறது. திருக்குர்ஆன் 66:13 வசனத்தில் இம்ரானின் மகள் மர்யமையும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஓர் எடுத்துக் காட்டாக இறைவன் விளக்குகிறான். 
"அவள் தன் கற்பைக் காத்துக் கொண்டாள். எனவே நாம் அவரிடம் (ஆண்பால் ஒருமை) எமது ரூஹை (வஹியை) ஊதினோம். அவர் தன் இறைவனின் வசனங்களையும், அவனுடைய வேதங்களையும் உண்மைப்படுத்தி விளக்கினார்." 
அதாவது ஒரு உண்மையான நம்பிக்கை கொண்டவரை மர்யம் என்று அழைக்கலாம். அந்த வசனத்தில் நீங்கள் பாருங்கள்...அதில் அல்லாஹ் கூறுகிறான்,"நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். " என்று வருகிறது..அரபியில் "வ நபக்னா ஃபீஹி மின் ரூஹினா என்று வதுள்ளது .மர்யம் (அலை) அவர்களை பற்றி பேசி கொண்டு இருக்கும் இறைவன் ஏன் இந்த இடத்தில் "ஃபீஹி" என்று கூறி ஆண்பால் ஐ உபயோகிக்க வேண்டும்..அதே சமயம் இந்த வசனம் வாக்களிக்கப்பட்ட ஒருவவரை பிரத்யேகமாக குறிக்கக்கூடிய ஒரு வசனம் என்பதே அல்லாமல் அனைவரையும் குறிக்கக்கூடியது அல்ல என்பதையும் (பீஹி என்ற )இந்த வார்த்தை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.அதே சமயம் இறைவன் மர்யம் (அலை) அவர்களை மட்டும் குறித்து சொல்லும்போது கூறுகிறான்,"இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூரும்) எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்(21:91) இந்த வசனத்தில் அல்லாஹ் மர்யம் (அலை) அவர்களை குறித்து கூறும்போது "ஃபீஹா" என்று பெண்பாலை உபயோகித்துள்ளான்...இந்த இடத்தில் இறைவன் மர்யம் (அலை) அவர்களையே முழுக்க கூறுகிறான் என்பதையும், 66:11 இல் ஒருவர் வருவார் அவர் மர்யம் பண்பை தன்னகத்தே கொண்டவராக இருப்பார்...அவர் மீது அல்லாஹ் தனது ரூஹை ஊதி (அதாவது வஹீ அறிவித்து) அவருக்கு ஈஸாவின் பண்பை அவரிலிருந்து பிறக்க செய்வான்....என்பதை இறைவன் இங்கு உதாரணமாக கூறி உள்ளான்...(இது ஈமானின் உச்சகட்டம்) இதனைதான் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களும் தனது நூலில்"நான் மர்யம் ஆனேன் பிறகு என்னுள் இருந்து ஈஸா பிறந்தார்" என்று உவமையாக கேட்கும் நபர் கருத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கூறினார்கள்...இதனால் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) உண்மையாகவே மர்யம் ஆகிவிட்டார் என்றோ உண்மையாகவே பனூ இஸ்ரவேலர்களுக்கு மட்டும் வந்த அந்த ஈஸாவோ ஆகிவிட்டார் என்பது பொருள் அல்ல. எவ்வாறு, யூசுப் நபி மலக்கு (12:32) என்று அழைக்கப்பட்டதால் மலக்காக இருப்பதில்லையோ அது போல மலக்கின் பண்பைக் கொண்டவரை மலக்கு என்றும் மர்யம் (அலை) அவர்களின் பண்பைக் கொண்ட நல்ல விசுவாசியை மர்யம் என்றும் அழைக்கலாம். இக்ரிமா (ரலி) அவர்களை நபித் தோழர்கள் இப்னு பிர்அவ்ன் என்று அழைத்தனர். காரணம் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூஜஹிலை தன் காலத்து பிர்அவ்ன் என்று கூறினார்கள். எனவே இக்ரிமா (ரலி) அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பிறகு அவரை இப்னு பிர்அவ்ன் என்று அழைத்தனர். இக்ரிமா (ரலி) பிர்அவ்னின் மகன் என்றோ, இக்ரிமாவின் தந்தை பிர்அவ்ன் என்றோ ஆட்சேபனை செய்பவர்கள் கருதினால் அதை விட அறிவின்மை வேறு எதுவும் இருக்க முடியாது. இப்னு மர்யம் என்று ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹமது (அலை) அவர்கள் தன்னை மர்யம் என்றும் ஈஸா என்றும் கூறியிருப்பதை கொஞ்சம் விளக்கமாகக் கூற வேண்டும் என்றால், ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் மர்யம் எனும் பண்பிலிருந்து ஈஸா என்ற பண்புக்கு மாறினார்கள். அதாவது மர்யம் எனும் பண்பு ஈஸா எனும பண்பை ஈன்றெடுத்தது. அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு – குறள்: 757 அன்பு எனும் தாய் பெற்றடுத்த அருள் எனும் குழந்தை, செல்வம் எனும் வளர்ப்புத் தாயால் வளரும். இவ்வாறே மர்யம் எனும் பண்பு ஈஸா எனும் பண்பைப் பெற்றடுத்தது. எல்லாக் குழந்தைகளையும் அது பிறக்கின்ற போது சைத்தான் தீண்டுகிறான். அதனால் அக்குழந்தைகள் அழுகின்றன. ஆனால் அவன் மர்யத்தையும், அவர் பெற்றடுத்த ஈஸாவையும் தீண்டவில்லை என்பது நபிமொழியாகும் (புகாரி தப்ஸீர் சூரா ஆலி இம்ரான்) பிறக்கும் அனைத்து நபிமார்களையும் சைத்தான் தீண்டி இருக்கிறான் என்று நம்ப முடியுமா? ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களையும் சைத்தான் தீண்டினான் (நவூதுபில்லாஹ்) என்று இந்த ஆட்சேபனை செய்பவர்கள் நம்பத் தயாரா? அவர்கள் நம்பினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இதன் பொருள் என்ன? மர்யம் (அலை) அவர்களின் பண்பையும் ஈஸா நபியின் பண்பையும் கொண்டவர்களை சைத்தான் தீண்டவில்லை ஏனையவர்களை சைத்தான் தீண்டுகிறான் என்று பொருள் கொள்வதே சரியாகும். (ஸம்ஹஷ்ரி தப்ஸீர் கஷ்ப்) நஜ்ரைன் கிறிஸ்தவர்கள் ஈஸா நபியை அல்லாஹ்வின் மகன் (இப்னுல்லாஹ்) என்று கூறிவாதிட்ட போது, நபி (ஸல்) அவர்கள் ஈஸா அல்லாஹ்வுக்குப் பிறந்த மகன் என்றால் அல்லாஹ்வின் பண்பாகிய மரணமற்ற நித்திய வாழ்வு அவர் மகனாகிய ஈஸாவுக்கு இருக்கவேண்டும். ஆனால் அவர் இறந்து விட்டார் என்று கூறி மறுக்கிறார்கள். (ஆதாரம்: அஸ்பாபுன் நுஸுல் பேரூத் பதிப்பு பக்கம் 68) அதாவது தந்தையின் பண்பு பிள்ளைக்கு இருக்கவேண்டும். இப்னு சபீல் (குர்ஆனில் வரும் சொல்) என்பதற்கு பாதையின் மகன் என்பது சொற்பொருள். வாழ்க்கையின் பயணம் செய்பவர்களை அல்ல, பயணமே தன் வாழ்க்கையாக கொண்டவர்களைத்தான் இப்னு சபீல் என்ற சொல் குறிக்கும். ஆனால் இப்னு சபீல் என்றால் பாதையில் கிடக்கும் குழந்தை என்று இந்த எதிரிகள் கூறுகிறார்கள் போலும். மேலே கூறிய கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால். மர்யம் என்பது ஒரு நல்ல விசுவாசி என்ற பண்பையும் இப்னு மர்யம் என்பது முதன்மையான விசுவாசியாகிய ஈஸா நபியின் பண்பையும் குறிக்கும் என்பது புலனாகிறது. நல்ல விசுவாசியாகிய மர்யமும் நானே! முதன்மையான விசுவாசியாகிய ஈஸாவும் நானே! என்பது முற்றிலும் சரி என்பது அல்லாஹ் நாடினாலேயன்றி நடுநிலையோடு சிந்திக்காதவர்களால் புரிந்து கொள்ளமுடியாது.

No comments

Powered by Blogger.