ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் தமது இறப்பை குறித்து கூறிய முன்னறிவிப்பு நிறைவேறியதா?



ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் இவ்வாறு வஹீ அறிவித்தான்;

ثَمَانِیْنَ حَوْلًا اَوْ قَرِیْبًا مِّنْ ذٰلِکَ

(இல்ஹாம் 1865 வருடம்-தத்கிரா பக்கம் 5, 2004 இல் வெளியிடப்பட்டது)

அதாவது "உமது வயது 80 அல்லது அதற்கு அருகாமை வயதாகா இருக்கும்"

இது பற்றி ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:

"வாக்குறுதியை பற்றி வஹியின் வெளிப்படையான சொற்கள் 74 மற்றும் 86 ற்கு உட்பட்ட வயதை குறிப்பிடுகிறது." (பராஹீனே அஹ்மதிய்யா பாகம் 5, ரூஹானி கஸாயின் பாகம் 21 பக்கம் 131)

பிறகு ஹஸ்ரத் வாக்களிக்கப்ப்ட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு இவ்வாறு இல்ஹாம் வந்தது, "எம்பது அல்லது அதில் ஐந்து, நான்கு அதிகம் அல்லது ஐந்து, நான்கு குறைவு" (ஹக்கீகத்துல் வஹீ, ரூஹானி கஸாயின் பாகம் 22 பக்கம் 100)

ஆக இந்த வஹியின் அடிப்படையில் அன்னாரின் வயது ஹிஜ்ரி அல்லது ஷம்ஸி வருட அடிப்படையில் இதற்கு உட்பட்டதுதான் என்பதை நிரூபித்துவிட்டால் மேற்கண்ட வஹீ நிறைவேறிவிட்டது என்று பொருள் ஆகும். அதாவது அன்னாரின் பிறந்த வருடம் 1822 இலிருந்து 1835 வருடத்திற்குள்ளானது என்பது நிரூபணம் ஆகிவிட்டால் பிறகு இதில் எவ்வித ஆட்சேபனையும் செய்ய வாய்ப்பில்லை.

ஒருவரின் சரியான வயதை கணக்கிட்டு பார்க்க இரண்டு விஷயங்களை குறித்து அறிய வேண்டியது அவசியமாகும். ஒன்று பிறந்த தேதி இரண்டாவது இறந்த தேதி.

ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் இறந்த வருடம் 24 ரபீயுஸ் சானி, ஹிஜ்ரி 1326 அதாவது மே 1908 ஆம் வருடம் ஆகும். ஆனால் ஹுஸூர் (அலை) அவர்களின் பிறந்த உறுதியான தேதி எந்த நூலிலிலும் குறிப்பிடப்படவில்லை. ஏனென்றால், ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் எக்காலத்தில் பிறந்தார்களோ அப்போது பிறந்த வருடத்தை நினைவில் வைத்திருக்கும் பழக்கம் இல்லாதிருந்தது. அரசு அதிகார அளவிலும் எவ்வித ரிஜிஸ்டரிலும் பதிவு செய்யும் பழக்கமும் இல்லாது இருந்தது. இக்காரணத்தினாலே ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களின் பிறந்த வருடத்தை குறித்து பலதர நூட்களில் பல்வேறு இடங்களில் வெறும் யூகத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தமது ஒரு நூலில் இவ்வாறு எழுதுகின்றார்கள்:

"வயதை குறித்த சரியான அறிவு இறைவன் ஒருவனே அறிவான். ஆனால் எனக்கு தெரிந்த வரையில் தற்போது வரை அதாவது ஹிஜ்ரி வருடம் 1323 வரை எனது வயது கிட்டதட்ட 70 வயதாக இருக்கிறது. அல்லாஹ்வே அறிவான்." (ஸமீமா பராஹீனே அஹ்மதிய்யா பாகம் 5, ரூஹானி கஸாயீன் பாகம் 21 பக்கம் 365)

ஆக இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால் ஹஸ்ரத் (அலை) அவர்களின் பிறந்த வருடம் பாதுகாக்கப்படவில்லை. ஆனால் ஒரு சில சூழ்நிலைகள் மற்றும் தற்போது இருக்கும் அன்னாரின் கூற்றுக்கள்  வழியாக ஹுஸூர் (அலை) அவர்களின் பிறந்த வருடத்தை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் கணக்கிட்டு பார்க்கும்போது அன்னார் பிறந்த தேதி 14 ஷவ்வால் 1250 ஹிஜ்ரி அதாவது பிப்ரவரி 1835 ஆம் வருடம் வெள்ளிக்கிழமை என்பது தெரிகிறது. இதற்கான ஆதாரத்தை நாம் கீழே தருகிறோம்.

வயதை குறித்த யூகத்தில் கருத்து வேறுபாடுகள்

இதற்கு முன் இதனை தெரிவிப்பதும் மிக அவசியம் ஆகும். அதாவது வயதை குறித்த யூகத்தில் உள்ள கருத்து வேறுபாடுகள் ஓர் ஆட்சேபனைக்குரிய விஷயமே இல்லை. இவ்வாறான கருத்து வேறுபாடுகள் தொன்றுதொட்ட காலத்திலிருந்து இருந்து வருகிறது. ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வயதை குறித்தும் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன;

"சிலர் 60 வயது எனவும், சிலர் 62 வயது 6 மாதம் எனவும் இன்னும் சிலர் 65 வயது என கூறுகின்றனர். ஆனால் ஆய்வாளர்களின் அடிப்படையில் 63 வயது என எழுதப்படுகிறது." (தஃப்ரீஹுல் அஸ்கியா ஃபீ அஹ்வாளுல் அன்பியா பாப் ததிம்மா தர் அஹ்வால் ஜனாப் ரிசாலத்து மஆப் பாகம் 2 பக்கம் 330-331-லக்னோ வெளியீடு)

தற்போது பாருங்கள் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நிலை குறித்த அனைத்தும் பாதுகாக்கப்பட்டிருந்தும் கூட நபி (ஸல்) அவர்களின் பிறந்த தேதி குறித்து கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இது வெறும் யூகத்தின் காரணமே அல்லாமல் வேறில்லை. ஆக இதே வகையான கருத்து வேறுபாடும் ஹஸ்ரத் (அலை) அவர்களின் வயத்தை குறித்தும் இருக்கின்றன. வெவ்வேறு இடங்களில் இது ஒரு தோராயமான வயது என்று மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இது கணக்கிடப்பட்டு கூறப்படவில்லை. வயதைப் பற்றி பேசும்போது பொதுவான வழிமுறை என்னவென்றால், இன்னாரின் வயது 60 அல்லது 70 கிட்ட இருக்கும். அவருக்கு 70 அல்லது 80 இருக்கும் எனது வயது 40 அல்லது 45 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்போது, ​​5 அல்லது 10 ஆண்டுகளின் வித்தியாசம் எவ்வளவு முக்கியமானது என்றாலும், இது வார்த்தையின் வழிமுறையாக இருக்கிறது. எனவே, அத்தகைய மதிப்பீட்டை ஒரு வாதமாக முன்வைத்து அதை "முரண்பாடு" என்று அறிவிப்பதன் மூலம் அதை எதிர்ப்பது முட்டாள்தனம் ஆகும்.

பிறந்த தேதியை தீர்மானித்தல்

1835

ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களின் பிறந்த வருடம் 1835 ஆகவும் 1834, 1839,1840  ஆகவும் நமக்கு அன்னாரின் நூட்களின் ஒரு சில மேற்கோள்களிலிருந்து தெரிய வருகிறது. இதில் அன்னாரின் கணிசமான மேற்கோள்கள் 1835-வது வருடத்தையே சுட்டிக்காட்டுக் காட்டுகின்றன. அதற்கான ஆதாரங்களை நாம் கீழே காண்போம்:

ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்: "இந்த எளியவன் வெள்ளிக் கிழமை அன்று 14-வது சந்திர தேதியில் பிறந்தான்" (தொஹ்ஃபா கோலடுவியா, ரூஹானி கஸாயின் பாகம் 17 பக்கம் 281 அடிக்குறிப்பு)

2- "நான் பிறந்த மாதம் பாகன் (மாசி) மாதமாக இருந்தது. சந்திரனின் 14 ஆம் தேதியாக இருந்தது. ஜுமுஆ நாளாக இருந்தது மேலும் முந்தைய இரவாக இருந்தது." (திக்ரே ஹபீப்-முஃப்தி சாதிக் சாஹிப் பக்கம் 238-239)

மேற்காணும் இரு மேற்கோள்களின் வாயிலாக ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் பிறந்த வருடம் மிகத் துள்ளியமாக அறிய முடிகிறது. ஏனென்றால் பாகன் (மாசி) மாதம் ஜுமுஆ நாள் மற்றும் சந்திரனின் 14 ஆம் தேதி இரண்டு வருடத்தில்தான் வந்துள்ளது. ஒன்று 17 ஃபிப்ரவரி 1832 அதாவது ரமழான் 14 ஹிஜ்ரி 1247 ஆம் வருடம், மற்றொன்று 13 ஃபிப்ரவரி 1835. அதாவது ஷவ்வால் 14, ஹிஜ்ரி 1250 ஆம் வருடம் ஆகும். (இதற்கான வரைபடத்தை கீழே காணலாம்)

 


ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் பிறிதொரு மேற்கொளை பாருங்கள் அதன் மூலம் இந்த தேதிதான் சரியானது என்பது தெளிவாகிறது.

அன்னாரு கூறுகின்றார்கள், "இது ஓர் வியப்புக்குரிய விஷயம் ஆகும். மேலும் நான் இதனை இறைவனின் அடையாளமாக கருதுகிறேன். அதாவது சரியாக ஹிஜ்ரி 1290-ல் இந்த எளியவன் இறைவனுடன் உரையாடும் அந்தஸ்தை பெற்றான்." (ஹக்கீகத்துல் வஹீ | ரூஹானி கஜாயீன் பாகம் 22 பக்கம் 208)

அதாவது சரியாக ஹிஜ்ரி 1290 ஆம் வருடம் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்களுக்கு வஹீ மற்றும் இல்ஹாம் அதிகமாக வரத் துவங்கியது. அப்போது அன்னாரின் வயது எத்தனையாக இருந்தது என்பதை பற்றியும் மற்றொரு இடத்தில் இவ்வாறு பதிவு செய்து வைத்துள்ளார்கள். அன்னார் கூறுகின்றார்கள்:

"நான் நாற்பது வயதை எட்டியபோது, ​​சர்வவல்லமையுள்ள இறைவன் தம்முடைய இல்ஹாம் மற்றும் வார்த்தைகளைக் கொண்டு என்னை வழிநடத்தினான்." (தர்யாக்குல் குலூப், ரூஹானி கஜாயின் பாகம் 15 பக்கம் 283)

மற்றொரு இடத்தில் ஒரு கவிதை வரியில் இவ்வாறு கூறுகின்றார்கள், "இந்த பயணிகளின் அறையில் (உலகத்தில்) நான் நாற்பது வயதை அடைந்த போது; தெய்வீக வெளிப்பாட்டிலிருந்து எனக்கு கண்ணியம் கிடைத்தது" (பராஹீனே அஹ்மதிய்யா பாகம் 5, ரூஹானி கஸாயின் பாகம் 21 பக்கம் 135)

இந்த அடிப்படையில் 1290-ல் 40 வருடத்தை கழித்தால் 1250 ஹிஜ்ரி வருகிறது. ஹிஜ்ரி 1250 ஆங்கில வருடம் அடிப்படையில் 1835 ஆகும். ஆக அன்னாரின் இவ்வாறான கூற்றுக்களை வைத்து நாம் பார்க்கும்போது அன்னார் பிறந்த வருடம் ஷவ்வால் 14 ஹிஜ்ரி 1250 அதாவது பிப்ரவரி 13, 1835 வருடம்தான் என்பது நிரூபணமாகிறது. அன்னார் இறந்த வருடம் 24 ரபியுஸ் சானி ஹிஜ்ரி 1326 அதாவது மே 26, 1908 ஆகும். இவ்வாறு 1326-1250= 76 அதாவது ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தமது 76 வது வயதில் மரணம் அடைந்தார்கள் என்பது இதிலிருந்து தெரியவருகிறது.

1834

ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களின் ஒரு சில மேற்கொளின் மூலமாக அன்னார் பிறந்த வருடம் 1834 என்பது நிருபணமாகிறது. அன்னார் ஓரிடத்தில் தமது தந்தை மரணத்தின் வருடத்தை குறித்து கூறும்போது கூறுகின்றார்கள்:

"ஆக எனது வயது சுமார் 40 ஆக இருக்கும்போது எனது தந்தை காலமானார்கள். ஒரு புறம் அவர்கள் இவ்வுலகிலிருந்து சென்று விடுவதும் மற்றொருபுறம் மிகவும் அதிகமாக இறைவனோடு பேசும் தொடர் என்னோடு துவங்கியது." (சீரத்துல் மஹ்தி பாகம் 1)

"இன்று வரை அதாவது 10 ஆகஸ்டு 1902 மிர்ஸா சாஹிப் மர்ஹூம் அவர்கள் மரணம் அடைந்து 28 வருடங்கள் ஆகின்றன." (நுஸூலே மஸீஹ், ரூஹானீ கஸாயீன் பாகம் 18 பக்கம் 495)

அன்னார் இந்தக் கூற்றை, ஒரு முன்னறிவிப்பை குறித்து கூறும்போது ஒரு சம்பவத்தோடு கூறுகின்றார்கள். அந்த சம்பவம் 1874 இல் நடந்ததாக இந்த நூலில் அன்னார் குறிப்பிட்டுள்ளார்கள். ஆக 1874-ல் 40 ஐ நீக்கினால் 1834 ஆம் வருடம் அன்னார் பிறந்த வருடமாக நிரூபணமாகிறது.

மேலே நாம் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் பிறந்த வருடத்தை துள்ளியமாக கணக்கிட்டு கூறியிருக்கிறோம். இதில் ஒரு சில வருடம் முன்ன பின்ன இருக்கலாம். ஆனாலும் இதன் காரணமாக அன்னாரின் இறப்பு குறித்த இல்ஹாம் பொய்த்து போனது (நஊதுபில்லாஹ்) என்று வாதம் செய்ய முடியாது. ஆனாலும் நமது சில எதிரிகள் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் யூகமாக கூறிய ஒரு சில மேற்கோள்களை காண்பித்து பாருங்கள் உங்கள் மிர்ஸா சாஹிப் தாம் பிறந்த வருடத்தை இவ்வாறு கூறியுள்ளார்கள் ஆனால் நீங்களோ இதற்கு நேர் எதிராக கணித்துள்ளீர்கள் என்று ஆட்சேபிக்கின்றார்கள். பொதுவாக யூகத்தின் அடிப்படையில் கூறும் விஷயம் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படாது. அது உறுதியானது என்றும் நாம் கூறி விட முடியாது. கீழே நாம் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களின் ஒரு சில மேற்கோள்களை தருகிறோம். அதன் மூலம் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களின் வயது 74 மற்றும் 76 என்பது நிரூபணமாகிறது. அன்னார் கூறுகின்றார்கள்:

1- "எனது தரப்பிலிருது 23 ஆகஸ்டு 1903 ஆம் ஆண்டு அன்று டூயி-க்கு எதிராக ஆங்கில மொழியில் இந்த பிரசுரம் வெளியிடப்பட்டது அதில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது அதாவது நான் 70 வயதிற்கு அருகில் இருந்தேன்." (ஆதாரம் ஹக்கீகத்துள் வஹீ ரூஹானி கஜாயின் பாகம் 22 பக்கம் 506)

அன்னார் மரணம் அடைந்த வருடமோ 1908 ஆம் ஆண்டு ஆகும். ஆக அன்னாரின் இக்கூற்றின் அடிப்படையில் அன்னாரின் வயது 1908-1903=5, 70+5+ 75 ஆகும். ஆக அன்னார் மரணம் அடையும்போது அன்னாரின் வயது 75 ஆகவும் கமரி வருட அடிப்படையில் அன்னாரின் வயது 77 ஆக  இருந்தது என்பது இதிலிருந்து தெரிய நிரூபணமாகிறது.

2- ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்கள் அப்துல்லாஹ் ஆத்தமை நோக்கி கூறுகின்றார்கள் "உங்களது வயது 64 என்றால் எனது வயதும் சுமார் 60 ஐ அடைந்துவிட்டது" (மஜ்மூஆ இஷ்திஹாராத் பாகம் 2 பக்கம் 88-89 | இஷ்திஹார் 5 அக்டோபர் 1894)

1894 இல் இந்த பிரசுரத்தை வெளியிடும்போது அன்னாரின் வயது கிட்டதட்ட 60 ஆக இருந்தது. இந்த அடிப்படையில் அன்னாரின் மரணம் எய்த ஆண்டாகிய 1908 இல் 1894 ஐ கழித்தாள் 14 வருகிறது. இந்த 14-ஐ 64 உடன் கூட்டினால் 74 வருகிறது. இந்த அடிப்படையில் கிட்டதட்ட அன்னார் மரணம் அடையும்போது சுமார் 74 வயதாக இருந்தது. கமரி வருடக் கணக்கின்படி அன்னார் மரணம் அடையும்போது அன்னாருக்கு வயது 76 ஆக இருந்தது.

3- ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தமது நூல் நுஸ்ரதுல் ஹக் (1905 இல் எழுதப்பட்டது) சமீமா பராஹீனே அஹ்மதிய்யா பகுதி 5 பக்கம் 97-ல் "இறைவன் எனக்கு கூறியுள்ளான் அதாவது எனது வயது 80 இலிருந்து ஐந்து வருடம் முன்ன பின்ன இருக்கும்" என்று கூறிவிட்டு இவ்வாறு எழுதுகின்றார்கள், "தற்போது எனது வயது கிட்டதட்ட 70 வயதாகும்." (பராஹீனே அஹ்மதிய்யா பகுதி 5, ரூஹானி கஸாயீன் பாகம் 21 பக்கம் 258) இதற்கு மூன்று வருடம் கழித்து அன்னார் மரணம் அடைகின்றார்கள். இவ்வாறு அன்னாரின் வயது கிட்டதட்ட 73 வயது ஆகும். கமரி வருடக் கணக்குபடி அன்னாரின் வயது 76 ஆகும்.

எதிரிகளின் சாட்சி

1- ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் மரணம் அடைந்த சமயத்தில்; ஸஃபர் அலி கான் ஆஃப் ஜமீன்தார் அவர்களின் தந்தை மௌலவி சிராஜுத்தீன் சாஹிப் அவர்கள் இவ்வாறு எழுதுகின்றார்கள், "மிர்ஸா குலாம் அஹ்மது சாஹிப் கிட்டதட்ட் 1860 அல்லது 1861 ஆம் வருடம் அன்று சியால்கோட் ஜில்லாவில் ஒரு எழுத்தாளராக இருந்தார். அப்போது அன்னாரின் வயது 22,23 ஆக இருக்கும். நாம் காண்கூடாக பார்த்த சாட்சியாக இதனை கூற முடியும் அதாவது இளைய பருவத்திலும் மிகவும் நற்குணமுடையவராக, இறையச்சமுடைய பெரியவராக இருந்தார்." (அக்பார் ஜமீன்தார் 8 ஜூன் 1908 பக்கம் 5, அசல் முஸ்தஃபா பாகம் 2 பக்கம் 234 இலிருந்து எடுக்கப்பட்டது)

2- "எழுபது வயதுக்கு மேற்பட்ட ஒருவர் (அவரே) (மிர்சா சாஹிப், காதிம்)" (தஃப்சீர் சனாயி 1899 இல் அச்சடிக்கப்பட்டது. அடிக்குறிப்பு நம்பர் 4)

இந்த அடிப்படையில் 1899 ஆம் ஆண்டு அன்று அன்னாரின் வயது 70 ற்கும் மேற்பட்டதாக இருந்தது. 1908-ல் அதாவது 9 வருடத்திற்கு பிறகு அன்னார் மரணம் அடைகின்றார்கள். இவ்வாறு அன்னாரின் வயது 79 ஆக நிரூபணமாகின்றது.

3- மௌலவி முஹம்மது ஹுஸைன் பட்டாளவி "இஷாஅத்துஸ் சுன்னா" எனும் இதழில் பாகம் 15 நம்பர் 8 பக்கம் 191 வருடம் 1893 -ல் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் மீது கடும் கோபம் கொண்டு இவ்வாறு எழுதுகின்றார், "அவர் 63 வயதாகவோ ஆகிவிட்டார்." இதற்கு பிறகு ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் 14 வருடம் உயிரோடு இருந்தார்கள். ஆக 63+14=77 வருடங்கள் இவ்வாறு ஆகின்றன. இவரின் சாட்சி மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால், இவர் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களின் கொடும் எதிரியாகவும் இருந்திருக்கிறார். அதே போன்று சிறு பருவத்தில் நண்பராகவும், பள்ளித் தோழனாகவும் இருந்தார்.

முஹம்மது ஹுஸைன் அவரே இவ்வாறு எழுதுகின்றார்: "பராஹீனே அஹ்மதிய்யாவை எழுதியவரின் வாழ்க்கை மற்றும் அவரின் சிந்தனையை குறித்து நாம் எந்த அளவுக்கு அறிந்து வைத்துள்ளோமோ அந்த அளவுக்கு நமது சமாக்காலத்தவர்களில் அறிந்திருப்பவர்கள் குறைவானவர்களே! எழுத்தாளர் அவர்கள்; எமது தோழர் ஆவார். இன்னும் சொல்லப்போனால் சிறு வயதில் (நாங்கள் குதுபி மற்றும் ஷரஹ் முல்லாவை படித்து வரும்போது) அவர் எமது பள்ளித் தோழராகவும் இருந்தார்." (இஷாஅத்துஸ் சுன்னா பாகம் 7 நம்பர் 6-11 வருடம் 1884 பக்கம் 169-170)

4- மௌலவி சனாவுல்லாஹ் அம்ரித்சரி அவர்கள் கூறுகின்றார்கள்: "மிர்ஸா சாஹிப் கூறியுள்ளார் அதாவது "எனது மரணம் சுமார் 80 வருடத்தை விட குறைவாக அல்லது அதிகமாக இருக்கும்" அதனின் அனைத்து படித்தரத்தையும் அன்னார் கடந்துவிட்டார்." (அஹ்லே ஹதீஸ் 3 மே 1907 பக்கம் 3 காலம் நம்பர் 2)

இதனை எழுதி சுமார் 1 வருடத்திற்கு பிறகு அன்னார் மரணம் அடைகின்றார்கள்.

இதே அம்ரித்சரி சாஹிப் அவர்கள் கூறுகின்றார்கள், "மிர்சா சாஹிப் அவரின் கூற்றுப்படி அன்னாரின் வயது 75 ஆகும்." (அஹ்லே ஹதீஸ் 21 ஜூலை 1908 பக்கம் 3 காலம் நம்பர் 2)

சனாவுல்லாஹ் அம்ரித்சரி அவர்கள் "முரக்க காதியானி பிப்ரவரி 1908 பக்கம் 12 இல் இவ்வாறு கூறுகிறார், "1896 இல் அப்துல்லாஹ் ஆத்தம் மரணம் அடைந்தார் அப்போது அன்னாரின் வயது 64" (இதனை அன்னார் இஜாஸே மஸீஹ் எனற தமது நூலிலும் குறிப்பிட்டுள்ளார்கள்)

ஆக சனாவுல்லாஹ் அம்ரித்சரி அவர்களின் இக்கூற்றின்படி பார்க்கும்போதும் அன்னார் கிட்டதட்ட 75 வது வயதில் மரணம் அடைந்தார்கள் என்பது உறுதியாகிறது. 1896-1908=12 இந்த 1264 (வயது) உடன் சேர்த்தால் அன்னாரின் வயது கிட்டதட்ட 76 வருகிறது. ஆக மேற்குறிப்பிடப்பட்ட வயதை விட கூடத்தான் செய்யுமே தவிர குறையாது.

இவ்வாறு பலதரப்பட்ட இடத்திலிருந்து பல்வேறு கூற்றை ஆய்வு செய்து பார்க்கும்போது அன்னாரின் மரணம் சுமார் 74 அல்லது 75 அல்லது 76-ல் நிகழ்ந்துள்ளது என்பதை அறியலாம். அன்னாரின் மரணத்தை குறித்த முன்னறிவிப்பை நாம் பார்த்தால் அதில் கூறப்பட்டுள்ளதாவது "உமது வயது 80 ஆக இருக்கும் அல்லது 5,6 வருடம் கூடுதலாக அல்லது ஐந்து ஆறு வருடம் குறைதலாக இருக்கும்" என்று வருகிறது. இவ்வாறு அன்னாரின் வயது 80-ல் ஐந்து அல்லது ஆறை குறைத்தால் 75 அல்லது 74 ஆக வருகின்றது. ஆகவே இந்த இல்ஹாமின் அடிப்படையிலேயே அன்னார் மரணம் அடைந்தார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இன்னும் சிலர் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்கள் தமது நூலாகிய "கிதாபுல் பரியாவில்" 1839 அல்லது 1840 ஆம் வருடத்தை தாம் பிறந்த வருடமாக கூறுகின்றார்கள். இவ்வாறு ஹஸ்ரத் மிர்ஸா சாஹிப் 68 அல்லது 69 வது வயதிலே மரணம் அடைந்துள்ளார். இவ்வாறு மிர்ஸா சாஹிப் தமது மரணத்தை கூறிய முன்னறிவிப்பு பொய்த்து போனது (நஊதுபில்லாஹ்) என்று கூறுகின்றனர்.

ஆம்! ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் 1839 அல்லது 1840 ஆம் வருடத்தை தாம் பிறந்த வருடமாக கூறியுள்ளார்கள்தான். இதனை அன்னார் ஓர் இடத்தில் மட்டுமே கூறியுள்ளார்கள். இதனால் அவர்கள் இந்த இரு வருடத்தில் ஒரு வருடத்தில் மட்டும்தான் பிறந்திருக்க முடியும் என்று உறுதியாக வாதம் புரிவதும் சரியானது அல்ல. காரணம் ஹஸ்ரத் மிர்ஸா சாஹிப் (அலை) அவர்கள் தமது இன்னும் சில நூட்களில் பதிவு செய்து வைத்துள்ள மேற்கோள்களை வைத்து பார்க்கும்போது அதில் அதிகமான மேற்கோள்கள் அன்னார் (அலை) 1835 ஆம் வருடத்தில் பிறந்ததைத்தான் எடுத்து கூறுகின்றன.

நாம் இறுதியில் இந்த ஆட்சேபனைக்கு பதில் அளிக்கும் விதமாக ஹஸ்ரத் மிர்சா பஷீர் அஹ்மது சாஹிப் M.A (ரலி) அவர்கள் சீரத்துல் மஹ்தியில் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களின் பிறப்பை குறித்து தன்னுடைய இறுதி தீர்ப்பை இவ்வாறு பதிவு செய்கின்றார்கள்:

"ஆம், ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் ஒரு சில இடங்களில் கூறிய கூற்றின் வாயிலாக ஓரளவிற்கு அன்னாரின் வயதை நிர்ணயிக்க முடிகிறது. இந்த அனுமானத்திலிருந்து ஒரு சில அனுமானத்தின் அடிப்படையில் அன்னாரின் பிறப்பு 1840 ஆம் வருடம் என்றும் ஆகிறது. இன்னும் சில அனுமானத்தின் அடிப்படையில் 1831 வருடம் வரை சென்றடைகின்றது. இதன் காரணமாகவே தற்போது வரை சரியான பிறப்பு தேதி என்ன? என்ற இந்த வாதம் இருந்து கொண்டு வருகிறது.

நான் இது விஷயமாக பல கோணங்களில் சிந்தித்திருக்கிறேன். மேலும் எனது பலவேறு அனுமானங்களை சீரத்துல் மஹ்தியில் கூறியுள்ளேன். ஆனால்  உண்மை என்னவென்றால், இந்த எண்ணம் எனக்கு மிகைத்து இருக்கிறது அதாவது ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் பிறப்பு வருடம் 1836 அல்லது அதற்கு அருகாமை வருடமாகவே இருக்கும். ஆனால் தற்போது வரை எந்த வித தேதியும் நிர்ணயிக்க முடியாமல் போனது. ஆனால் தற்போது ஒரு சில ஆதாரங்கள் மற்றும் ஒரு சில அறிவிப்புகள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் குறிப்பிட்ட தேதியை அறிய முடிகிறது. அது ஜுமுஆ நாள் 14 ஷவ்வால் 1250 ஹிஜ்ரி வருடம் ஆகும் அதாவது 13 பிப்ரவரி 1835 ஆம் வருடம் அதாவது 1 பாகன் (மாசி மாதம்) 1891 ஆம் வருடம் ஆகும். இதனை நிர்ணயிக்க காரணம் என்னவென்றால்,

1- ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் மிகத்தெளிவாக நிர்ணயித்துக் கூறியுள்ளார்கள். இதில் எவ்வித தவறு அல்லது தவறான எண்ணம் ஏற்பட வாய்ப்பே இல்லை. அதாவது "நான் ஜுமுஆ நாளன்று சந்திரனின் 14 ஆம் தேதி அன்று பிறந்தேன்." (நூல்-தொஹ்ஃபா கோலாடுவியா)

2- மற்றொன்று வாய்மூல அறிவிப்பின் வாயிலாக மதிப்பிற்குரிய முஃப்தி முஹம்மது சாதிக் சாஹிப் (ரலி) அவர்களின் மூலமாக எனக்கு கிடைத்த ஒரு அறிவிப்பு. இதனை முஃப்தி சாஹிப் தன்வசம் எழுதியும் வைத்துள்ளார்கள். இந்த அறிவிப்பின் வாயிலாக தெரிய வருவது என்னவென்றால் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் ஒரு முறை கூறினார்கள், அதாவது ஹிந்தி மாதம் அடிப்படையில் நான் பாகன் (மாசி) மாதம் அன்று பிறந்தேன்.

3- மேற்கூறப்பட்ட தேதிகள்; ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் பலதரப்பட்ட மேற்கோள்கள் மூலமாக மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. உதாரணத்திற்கு அன்னாரின் இவ்வாறான கூற்று அதாவது அன்னார் சரியாக 1290 ஹிஜ்ரியில் இறைவனோடு உரையாடும் அந்தஸ்தை பெற்றிருந்தார்கள் (ஹக்கீகத்துல் வஹீ பக்கம் 199) மேலும் அப்போது அன்னாரின் வயது 40 வயதாக இருந்தது (தர்யாக்குல் குலூப் பக்கம் 68) என்பன போன்ற கூற்றுகள்.

மேலும் மிர்ஸா பஷீர் அஹ்மது சாஹிப் M.A (ரலி) அவர்கள் மேலே நாம் பதிவிட்ட வரைபடத்தை தமது நூலில் பதிவு செய்து அதற்கு கீழே இவ்வாறு கூறுகின்றார்கள்:

"இந்த வரைபடத்தின் அடிப்படையில் 1832 ஆம் வருடமும் சரியானது என்பது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மேலே கூறப்பட்டுள்ள, அடுத்து கூறப்படவுள்ள மற்ற சில காரணிகளினால், சரியானது எதுவென்றால்; ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் 1835 ஆம் வருடம் அன்று பிறந்தார்கள். ஆக 13 பிப்ரவரி 1835 ஆம் வருடம் அதாவது ஹிஜ்ரி 1250 ஜுமுஆ நாள் சரியானது என்று தீர்மானிக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் அன்னார் மரணம் அடையும்போது 24 ரபீயூஸ் சானி 1326 ஹிஜ்ரி வருடம் ஆகும். அன்னாரின் வயது முழுமையாக 75 வருடம் 6 மாதம் 10 நாட்கள் ஆகின்றன. (நூல்- சீரத்துல் மஹ்தி பாகம் 3 பக்கம் 575- 577)

மேற்கண்ட ஆதாரங்கள் அடிப்படையில் அன்னாரின் உறுதியான பிறப்பு வருடம் 1835 ஆக இருந்தாலும் அல்லது ஒரு சில வருடம் முன்ன பின்ன இருந்தாலும், அன்னார் தமது மரணம் அடையும் வயதை குறித்து என்ன முன்னறிவிப்பை செய்தார்களோ; அது கச்சிதமாக நிறைவேறியது என்பதை நம்மால் அறிய முடிகிறது. அல்ஹம்துலில்லாஹ் அலா தாலிக்  

ஆக்கம்: இப்னு ரஹ்மத்

No comments

Powered by Blogger.