ஷாத்தானி துஸ்பஹானி | இரு ஆடுகள் அறுக்கப்படும்
ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களின் பல்வேறு முன்னறிவிப்புகள் இறைவன் அருளால் நிறைவேறியிருக்கின்றன இன்னும் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. ஒரு முன்னறிவிப்பை குறித்து நாம் கீழே கூறியுள்ளோம். அது ஒரு முன்னறிவிப்பாக இருந்தாலும் முன்னறிவிப்பின்படி நிகழ்ந்த அந்த சம்பவம் ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களுக்கும் அன்னாரின் ஜமாஅத் சகோதரர்களுக்கும் மிகவும் துயரதிற்குரியதாக இருந்தது. அந்த முன்னறிவிப்பு மற்றும் அந்த சம்பவம் என்ன என்பதை குறித்து நாம் கீழே காண்போம்.
ஷாத்தானி துஸ்பஹானி என்ற இறை முன்னறிவிப்பு அன்னாருக்கு கிடைத்தது. அதாவது இரு ஆடுகள் அறுக்கப்படும் என்பது இதன் பொருளாகும். இந்த முன்னறிவிப்பு யாரை குறித்து நிகழும் என்பது அறியாதிருந்த சமயத்தில் சுமார் 23 வருடம் கழிந்து இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. அதாவது ஹஸ்ரத் சாஹிப்ஸாதா அப்துல் லத்தீஃப் சாஹிப் மற்றும் அன்னாரின் சீடரான அப்துர் ரஹ்மான் சாஹிப் ஆகிய இருவரின் ஷஹாதத் சம்பவத்தையே இந்த முன்னறிவிப்பு தெளிவாக்குகிறது என்பதை ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்கள் பிறகு அறிந்து கொண்டார்கள்.
சாஹிப்ஸாதா ஹஸ்ரத் அப்துல் லத்தீஃப் சாஹிப் அவர்களின் ஷாஹதத்:
அன்னாரின் ஷஹாதத் சம்பவத்தை படிக்கும்போது ஒரு பக்கம் ஈமானில் புத்துணர்வு ஏற்பட்டாலும் மறுபுறம் கண்களில் கண்ணீர் பொங்கி எழுகின்றது. அந்த அளவுக்கு அன்னாரின் ஷஹாதத் சம்பவம் நிகழ்ந்தது.
அன்னார் ஹஜ் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து ஹஜ் செல்வதற்கு முன் காதியான் ஒருமுறை சென்று வரலாமே என்று முடிவெடுத்து காதியான் வருகை தந்தார்கள். சில மாதங்கள் அன்னாருடன் இருந்த காரணத்தினால் ஹஜ் மாதம் கழிந்தது. அன்னார் காதியானிலிருந்து ஆப்கானிஸ்தான் வருகை தந்து பல்வேறு நபர்களுக்கு ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களின் தூதுச்செய்தியை எட்ட வைத்தார்கள். இதற்கு காபூலின் தலைவர் மற்றும் அரசாங்கத்திடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு தண்டனையாக அன்னாரை கல்லெறிந்து கொல்ல திட்டம் தீட்டினர். இந்த கொடூர சம்பவத்தை கண்டு ஆப்கானிஸ்தானிலுள்ள எவருக்கும் ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களை ஏற்க தைரியம் வரவில்லை.
இறுதியில் ஹஸ்ரத் ஸாஹிப்ஸாதா அப்துல் லத்தீஃப் ஸாஹிப் (ரலி) அவர்களை 14 ஜூலை 1903 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் கல்லெறிந்து ஷஹீது ஆக்கினார்கள்.
இதற்கு முன் அன்னார் பல வகையில் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். அன்னார் ஆப்கானிஸ்தானில் ஆன்மீகம் மற்றும் அரசியலில் மிகப்பெரும் அந்தஸ்தை பெற்றிருந்தார்கள். சில இலட்சம் மக்கள் தொகை அன்று இருக்கும்போது அன்னாருக்கென்று 50000 அஃப்கானி சீடர்களாக இருந்தார்கள். அன்னார் காபூல் தலைவரின் ரிலீஜியஸ் அட்வைஸராக இருந்தார்கள். அன்னார்தான் அமீர் அப்துர் ரஹ்மானின் மரணத்தின்போது அவரது மகனான ஹபீபுல்லாஹ் கானுக்கு கிரீடம் அணிவித்தார்கள். அன்னாரை கைது செய்து அன்னாரின் ஊராகிய செய்யதுகாஹ் கோஸ்த் எனுமிடத்திலிருந்து காபூல் கொண்டு வருவது சாதாரண விஷயமாக இருந்ததில்லை. அன்னார் இறை திருப்திக்கு முன் தனது தலையை குனிய வைத்துவிட்டார்கள். தனது சீடர்களுக்கு எவ்வித அசம்பாவிதம் செய்வதிலிருந்தும் தவிர்ந்திருக்குமாறு கூறினார்கள்.
ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களை மறுத்திட கட்டாயப்படுத்தினார்கள். காஃபிர் ஃபத்வா அன்னாருக்கு வழங்கப்பட்டது. இதை எல்லாம் கேட்ட பிறகும் அன்னார் தமது ஈமானில் உறுதியாக இருப்பதை கண்டு எதிரிகள் அன்னாரின் மூக்கில் (மூக்கணாங்)கயிறிட்டு கொலை செய்யும் இடத்தை நோக்கி இழுத்து சென்றார்கள். அங்கு குழி தோண்டி அதில் அன்னாரை இறக்கினார்கள். இறுதியில் அன்னாருக்கு கூறப்பட்டதாவது, தலைவரின் காதிலாவது ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹின் மீதுள்ள குஃப்ர் ஃபத்வாவை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூற சொன்னார்கள். ஆனால் அன்னார் அந்த கொடூரக்காரர்களின் பேச்சை கேட்கவில்லை. இறுதியில் அன்னாரை கல்லெறிந்து ஷஹீத் ஆக்கினார்கள்.
அன்னாரின் மீது எப்போது முதன்முறையாக நெற்றியில் கல்லடி பட்டதோ அப்போது அன்னாரின் தலை கிப்லாவை நோக்கி தலைகுனிந்தது. பிறகு அன்னார்
"அன்த்த வலிய்யுன் ஃபித்துன்யா வல் ஆகிரஹ் - தவஃப்ஃபினி முஸ்லிமன் வ அல்ஹிக்னி பிஸ் ஸாலிஹீன்" என்ற வசனத்தை ஓதினார்கள்.
இவ்வாறு அன்னார் முழு விருப்பத்துடன் தனது மரணத்தை ஏற்று கொண்டு இறைவனை அடைந்தார்கள்.
அன்னாரின் ஷஹாதத் 17 ரபிய்யுல் அவ்வல் 1321 , 14 ஜூலை 1903 அன்று நிகழ்ந்தது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ஹஸ்ரத் அப்துர் ரஹ்மான் சாஹிப் (ரலி) அவர்களின் ஷஹாதத்:
அன்னார் காதியான் வந்து ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களின் கையில் பைஅத் செய்த பிறகு ஆப்கானிஸ்தான் சென்று தமது சீடரான அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களுக்கு தமது பைஅத்தின் கடிதத்துடன் ஒரு சில அன்பளிப்பையும் வழங்கி காதியானுக்கு அனுப்பி வைத்தார்கள். ஹஸ்ரத் அப்துர் ரஹ்மான் ஷஹீத் (ரலி) அவர்களும் ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களின் உண்மை தன்மையை அறிந்து அஹ்மதிய்யத்தை ஏற்று கொண்டார்கள் பிறகு அப்கானிஸ்தான் வந்தபோது அவர்களும் கழுத்து நெறிக்கப்பட்டு ஷஹீத் ஆக்கப்படுகின்றார்கள்.
இவ்வாறு ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களின் காலத்தில் இரு பெரும் ஷஹாதத் நிகழ்வுகள் நிகழ்ந்தன. "ஷாத்தானி துஸ்பஹானி" என்ற முன்னறிவிப்பின் வாயிலாக இதனை குறித்து ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களுக்கு அல்லாஹ் முன்னரே அறிவித்திருந்தான். இந்த இல்ஹாம் பராஹீனே அஹ்மதிய்யா எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்களின் ஷஹாதத் சம்பவத்திற்கு பிறகு ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களுக்கு அல்லாஹ் இவ்வாறு அறிவித்தான்;
"இவர்கள் ஷஹீத் ஆனதற்காக வருத்தம் கொள்ளாதீர். அவர்களின் ஷஹாதத்தில் இறைவனின் ஹிக்மத் இருக்கிறது"
மேலும் கூறினான்:
"இந்த இரத்தத்தில் அதிக அருட்கள் இருக்கின்றன. அவை பிறகு வெளிப்படும். மேலும் இந்த இரத்தம் எவ்வாறெல்லாம் பல்கி பெறுகிறது என்பதையும், இந்த இரத்தம் ஒருபோதும் வீணாக்கப்படமாட்டாது என்பதையும் காபூல் நிலம் அறிந்துகொள்ளும்"
ஹஸ்ரத் ஸாஹிப்ஸாதா அப்துல் லத்தீஃப் ஸாஹிப் ரலி அவர்கள் காதியான் வந்தபோது பஷ்து மொழியில் அன்னாருக்கு மீண்டும் மீண்டும் "சர் பதஹ்" என்ற இல்ஹாம் இறங்கியது. அதாவது இந்த வழியில் உமது தலையை கொடுத்துவிடு. மேலும் வருத்தம் கொள்ளாதீர். காபூல் நிலத்தின் நல்லவற்றிற்காக இதனையே இறைவன் நாடுகிறான்.
ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களுக்கு இந்த ஷஹாதத் சம்பவத்தை கேட்டு ஏற்பட்ட வருத்தத்தை இவ்வாறு கீழ் வரும் வரியில் தெரிவிக்கின்றார்கள்:
"காபூல் நிலமே! உன்மீது கடும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்பதற்கு சாட்சியாக இரு. பாக்கியமற்ற நிலமே! நீ இறைவன் பார்வையில் வீழ்ந்துவிட்டாய். நீ இந்த மிகப்பெரும் கொடூரத்தின் நிலமாவாய்."
(தத்கிரதுஷ் ஷஹாதத்தைன் ரூஹானி கஜாயீன் பாகம் 20)
இரு ஷஹாதத்தை நிகழ்த்திய அமீர் ஹபீபுல்லாஹ் கான் இதற்கு முன் இவரின் தந்தை அமீர் அப்துர் ரஹ்மான் கான் இருவரும் படிப்பிற்குரிய மரணத்தை அடைந்தார்கள். அதிலிருந்து இன்றுவரை இந்த பாக்கியமற்ற நிலத்தில் நோய்நொடிகள், வான அழிவுகள், கொலைகள், போர்கள், முடிவடையாத கொடுமைகளின் காலம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மேலும் என்றும் அமைதி நிலவவில்லை.
அன்னாரின் ஷஹாதத்தை குறித்து ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
"ஷஹீது மர்ஹூம் அவர்கள் மரணம் அடைந்து எனது ஜமாஅத்திற்கு ஒரு முன்னுதாரணத்தை வழங்கியுள்ளார். மேலும் உண்மையில் எனது ஜமாஅத் ஒரு மிகப்பெரிய முன்னுதாரணத்தின் தேவையுடையதாக இருந்தது. அப்துல் லத்தீஃபே! உம்மீது ஆயிரம் அருட்கள் உண்டாகட்டுமாக. நீர் எனது வாழ்விலேயே தமது நேர்மைக்கான முன்னுதாரணத்தை காண்பித்துவிட்டீர்."
(தத்கிரதுஷ் ஷஹாதத்தைன் - ரூஹானி கஜாயின் பாகம் 20)
மேலும் கூறுகின்றார்கள்:
"அவரும்தான் மிகத் தொலைவில் உள்ள ஓர் இடத்தில் வசிப்பவராக இருந்தார். அவரின் நேர்மை, விசுவாசம், தூய்மை மற்றும் உறுதிபாட்டிற்கு முன் பஞ்சாபில் இருக்கும் பெரிய பெரிய தூயவர்கள் வெட்கப்பட வேண்டியதிருக்கிறது. அந்த மனிதர் எங்கள் அனைவருக்கும் பின்பு வந்து அனைவருக்கும் முன்பாகவே மேன்மை பெற்றுவிட்டார் என்று கூற வேண்டியதிருக்கிறது."
(தத்கிரத்துஷ் ஷஹாதத்தைன் ரூஹானி கஜாயீன் பாகம் 20 பக்கம் 73)
மேலும் கூறுகின்றார்கள்:
"ஸாஹிப்ஸாதா ஹஸ்ரத் அப்துல் லத்தீஃப் ஸாஹிப் அவர்களின் ஷஹாதத் உங்களுக்கு ஒரு நல் முன்மாதிரியாக இருக்கிறது. தத்கிரத்துஷ் ஷஹாதத்தைன் எனும் நூலை மீண்டும் மீண்டும் படியுங்கள்"
(அல் ஹகம் 24 ஜனவரி 1904)
ஹஸ்ரத் ஸாஹிப்ஸாதா அப்துல் லத்தீஃப் ஸாஹிப் (ரலி) அவர்களின் பேரர் ஸாஹிப்ஸாதா ஜமீல் லத்தீஃப் ஸாஹிப் அவர்கள் தனது பாட்டனாரை பற்றி "செய்யதுஷ் ஷுஹதா" எனும் நூலை எழுதியுள்ளார்கள். ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் ரலி அவர்கள் கூறுகின்றார்கள், " இந்து நூலை படிக்கும்போது கண்கள் கண்ணீர் வடிப்பதை விட்டு இருக்காது".
அன்னாரின் ஷஹாதத்திற்கு பிறகு அன்னாரின் குடும்பங்களையும் கைது செய்தான் காபூலின் தலைவன். பிறகு அக்குடும்பத்தினர் ஹிஜ்ரத் மேல் ஹிஜ்ரத் மேற்கொண்டு பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். அன்னாரின் இரு மகன்களின் மரணம் கைது செய்யப்பட்ட நேரத்திலேயே நிகழ்ந்துவிட்டது. பிறகு இறுதியில் மிஞ்சியவர்கள் ஹிஜ்ரத் செய்து பனூ(ன்) சராயே நவ்ரங் எனும் இடத்தில் தஞ்சம் புகுந்தனர். அன்னாரின் ஷஹாதத்தின் தூய தாக்கத்தின் காரணமாக அவர்களின் குடும்பம் ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களின் ஜமாஅத்தில் உறுதிமிக்கவர்களாக இருந்து வருகின்றனர் உலகத்தில் பல்வேறு இடங்களில் பரவி ஜமாஅத்தில் பல்வேறு முன்னுதாரணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Post a Comment