ஃபஜ்ஜே ரவ்ஹா ஹதீஸை வைத்து ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்கள் மீது வைக்கும் ஆட்சேபனைக்கான பதில்

ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் சாஹிப் காதியானி (அலை) அவர்கள் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மஹ்தி இல்லை என்பதற்கு எதிரிகள் இவ்வாறான ஓர் ஹதீசையும் எடுத்து வைக்கின்றனர். அந்த ஹதீஸை குறித்து நாம் கீழே காணலாம்.


(١٢٥٢) وحَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَعَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، قَالَ سَعِيدٌ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، حَدَّثَنِي الزُّهْرِيُّ، عَنْ حَنْظَلَةَ الْأَسْلَمِيِّ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَيُهِلَّنَّ ابْنُ مَرْيَمَ بِفَجِّ الرَّوْحَاءِ، حَاجًّا أَوْ مُعْتَمِرًا، أَوْ لَيَثْنِيَنَّهُمَا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது ஆணையாக! மர்யமின் புதல்வர் அவர்கள் (மக்கா - மதீனா இடையே உள்ள) "ஃபஜ்ஜுர் ரவ்ஹா" எனுமிடத்தில் ஹஜ்ஜுக்காக அல்லது உம்ராவிற்காக அல்லது அவ்விரண்டுக்குமாகத் தல்பியாச் சொல்வார்கள். இதை அபுஹுரைரா ரலி அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: (ஸஹீஹ் முஸ்லிம்: 2403., அத்தியாயம்: 15. ஹஜ்) ரஹ்மத் பதிப்பகம்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இந்த முன்னறிவிப்பின் படி மிர்சா குலாம் அஹ்மத் வாக்களிக்கப்பட்ட மஸீஹாக(ஈஸாவாக) இருந்திருந்தால் இந்த முன்னறிவிப்பை அவர் நிறைவேற்றி இருக்கவேண்டும். ஆனால் உண்மை என்னவெனில் அவர் ஹஜ்ஜும் செய்யவில்லை உம்ராவும் செய்யவில்லை ஃபஜ்ஜுர் ரஹ்வா என்ற இடத்திற்கும் போகவுமில்லை தல்பியாவும் சொல்லவில்லை இன்னும் சொல்லப்போனால் அவர் பிரிடிஷ் இந்தியாவை விட்டே வெளியில் போனதே இல்லை என்பதுதான் வரலாறு கூறும் உண்மை.


நமது பதில்:
முதல் விஷயம் இந்த ஹதீஸ் பலகீனமானதாகும். அதற்கு காரணம் என்னவென்றால்,  இந்த ஹதீஸில் வரக்கூடிய "முஸ்லிம் இப்னு ஷிஹாப் ஸஹ்ரி பலகீனமானவர் ஆவார்۔  அபு சனாது அவர்கள் கூறுகின்றார்கள்,"நாங்கள் ஹலால் மற்றும் ஹராம் குறித்த ஹதீஸை திரட்டி வந்தோம் ஆனால் இப்னு ஷஹாப் அவர்கள் கேட்பதையெல்லாம் எழுதி வந்தார் ஆகவே அது ஏற்புடையாதாக இருக்காது. (ஆதாரம் நூல்: தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாகம் 9 பக்கம் 448 பாபுல் மீம் ஸேரே லஃப்ஸ் முஹம்மது), அபூ தாவூத்," இவரின் கிட்டதட்ட 200 அறிவிப்பானது நம்ப தகுதியல்லாத அறிவிப்பாளர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டது என்று கூறிய கூற்றும் (தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாபுல் மீம் ஸேரே லஃப்ஸ் முஹம்மத் பாகம் 9 பக்கம் 447), அதே போன்று அல்லாமா ஸஹ்பி அவர்கள் இவர் சில நேரங்களில் ஏமாற்றுக்காரராக இருந்தார் (மீஸானுல் இஃததால் பக்கம் 335) என்றும் கூறுகின்றார்கள். இவ்வாறு இந்த அறிவிப்பில் வரக்கூடிய மற்றொரு அறிவிப்பாளராகிய சயீது இப்னு மன்ஸூர் அவர்கள் பிடிவாதக்காரராக இருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு என்றால் தமது ஹதீஸில் தனது தவற்றை கண்டால் தமது அந்த தவற்றை ஏற்றுக் கொள்ளமாட்டார். (தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாபுல் ஹா ஸேரே லஃப்ஸ் ஹுர்மஹ் பாகம் 4 பக்கம் 90) 

(ஆதாரம் நூல்: தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாகம் 9 பக்கம் 448)


(தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாபுல் மீம் ஸேரே லஃப்ஸ் முஹம்மத் பாகம் 9 பக்கம் 447)


(மீஸானுல் இஃததால் பக்கம் 335)

(தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாபுல் ஹா ஸேரே லஃப்ஸ் ஹுர்மஹ் பாகம் 4 பக்கம் 90)

இரண்டாவது விஷயம் இந்த ஹதீஸை நாம் ஓர் வாதத்திற்கு உண்மையானது என்று எடுத்து கொண்டாலும், இந்த ஹதீஸில் "ஃபஜ்ஜே ரவ்ஹா" என்று வந்துள்ளது. இது இஹ்ராம் கட்டுவதற்கான இடமே இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இக்மால் ஷரஹ் முஸ்லிமில் இவ்வாறு வந்துள்ளது "லைச பி மீகாத்" (இக்மால் ஷரஹ் முஸ்லிம் பாகம் 3 பக்கம் 378) நிலை இவ்வாறு இருக்கும்போது ஈஸா அலை அவர்கள் எவ்வாறு இங்கிருந்து இஹ்ராம் அணிவார்கள்? அவர்கள் இஸ்லாத்தில் புது சட்டத்தை வகுப்பார்களா?
(இக்மால் ஷரஹ் முஸ்லிம் பாகம் 3 பக்கம் 378)

மூன்றாவது விஷயம் என்னவென்றால், இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள விஷயம் உண்மையில் ஓர் கஷ்ஃப் (ஆன்மீக காட்சி) ஆகும். இந்த காட்சியில்தான் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ஜே ரவ்ஹா என்ற பள்ளத்தாக்கில் மசீஹ் இப்னு மர்யம் அலை அவர்களை தல்பியா கூறியவாறு காண்கிறார்கள். முஸ்லிம் ஷரீஃப் இன் மற்றொரு ஹதீஸில் இவ்வாறு வந்துள்ளது, அதாவது "அல் அஸ்ரக் என்ற பள்ளத்தாக்கில் ஹஸ்ரத் மூஸா அலை அவர்கள் தல்பியா கூறியவாறும், அதே போன்று ஹர்ஷீ பள்ளத்தாக்கில் ஹஸ்ரத் யூனுஸ் அலை அவர்கள் சிவப்பு நிற ஒட்டகத்தில் இருந்தவாறு தல்பியா கூறியவாறும் ஹஜ்ஜிற்கு சென்றவாரும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் காண்கிறார்கள். (மிஷ்காத் பக்கம் 508 முஸ்லிம் கிதாபுல் ஹஜ்)

இவ்வாறே ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ஜே ரவ்ஹா எனும் பள்ளத்தாக்கிலும் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை தல்பியா கூறியவாறு கேட்டார்கள். இச்சம்பவமானது நடந்து முடிந்த ஓர் கஷ்ஃப் காட்சியாகும். வரக்கூடிய வாக்களிக்கப்பட்ட மஸீஹிற்கும் இந்த ஹதீஸிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

எமது இந்த கூற்றிக்கு சாதகமாக ஹஸ்ரத் அபூ மூஸா அவர்களின் ஓர் ஹதீசும் சான்று பகர்கின்றது. அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது,

قال ابو موسی عن النبی صلی اللہ علیہ وسلم انّہ مرّ بالصخرۃِ من الرّوحاءِ سبعون نبیّا حفاۃً علیھمُ العباءِ یطوفون البیت العتیق۔

அதாவது, அபூ மூஸா அவர்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கின்றார்கள், "அர்ரவ்ஹா பள்ளத்தாக்கிலிருந்து 70 நபிமார்கள் காலணியில்லாமல் போர்வையை போர்த்தி கொண்டு பைத்துல்லாஹ்வை தவாஃப் செய்தார்கள். (ஷரஹுத் தஅர்ருஃப் பக்கம் 7 கல்மி)
(ஷரஹுத் தஅர்ருஃப் பக்கம் 7 கல்மி)

இதில் ஈசப்னு மர்யமும் அடங்குவார்கள் என்பது தெரியவருகிறது. அல்லது அவர்கள் மட்டும் தனியாக இவ்விடத்தில்ருந்து தல்பியா செய்ததை நபி ஸல் அவர்கள் கண்டார்கள்.

மற்றொரு அறிவிப்பில் இவ்வாறு வருகிறது, "ஹஸ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நான் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுடன் கஃபாவை தவாஃப் செய்து வந்து கொண்டிருந்தேன். அப்போது நபி ஸல் அவர்கள் ஒருவருக்கு கை கொடுத்ததை கண்டேன். ஆனால் அவர் யார் என்பது என் கண்ணுக்கு தெரியவில்லை. நான் கூறினேன், யா ரசூலுல்லாஹ் (ஸல்) ! நாம் உங்களை ஒருவருக்கு கை கொடுத்ததாக கண்டோம் ஆனால் அந்த நபரை நாம் காணவில்லை. (என்று கேட்டேன்) அதற்கு நபி ஸல் அவர்கள் கூறினார்கள், அந்த நபர் எனது சகோதரர் ஈஸா இப்னு மர்யம் ஆவார்கள். நான் அவர் தவாஃப் செய்வதை குறித்து காத்திருந்தேன். பிறகு நான் அவருக்கு சலாமும் கூறினேன். (அல் ஃபதாவா அல் ஹதீஸிய்யஹ் லில் இமாம் இப்னு ஹஜருல் ஹைஸ்மி, பக்கம் 154 மிஸ்ரி- உருது மொழியாக்கம் பக்கம் 515)
(அல் ஃபதாவா அல் ஹதீஸிய்யஹ் லில் இமாம் இப்னு ஹஜருல் ஹைஸ்மி, பக்கம் 154 மிஸ்ரி- உருது மொழியாக்கம் பக்கம் 515)

ஆகவே, இந்த உம்மத்தில் தோன்றக்கூடிய வாக்களிக்கப்பட்ட மஸீஹிற்கும் இந்த ஹதீஸிற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆகவே இந்த ஹதீஸை கொண்டு இந்த உம்மத்தில் தோன்றக்கூடிய மஸீஹ் ஹஜ் மற்றும் உம்ரா செய்யவில்லை என்று ஆட்சேபனை செய்து அன்னார் பொய்யர் என்ற முடிவுக்கு வருவது தவறாகும் என்பது நிரூபணமாகிறது.

சிலர் இவ்வாறும் கூற வாய்ப்புண்டு அதாவது, ஒரு ஹதீஸானது ஆன்மீக காட்சியா? அல்லது நேரடியான பௌதீக நிகழ்வா? என்பதை அந்த ஹதீஸ்தான் கூறவேண்டும்.

நமது பதில்: இந்த கருத்து தவறானதாகும். அப்படி பார்த்தால் இந்த ஹதீஸில் இது பௌதீக நிகழ்வாகும் என்று கூடத்தான் கூறவில்லை. ஆகவே இதனை பௌதீக ஹதீஸ் இல்லை என்று கூறியிரிருக்கலாமே! ஆனால் உண்மை அது இல்லை... ஒரு ஹதீஸ் அது கனவா அல்லது ஆன்மீக காட்சியா என்பதை அந்த ஹதீஸின் திராயத்தை அதாவது கருத்தை வைத்துதான் எடை போட்டு பார்க்க வேண்டும். சில ஹதீஸ்களில் ரசூல் ஸல் அவர்கள் "இரவில் என்னிடம் இரு நபர்கள் வந்தார்கள்" (புகாரி 3236) என்று கூறி அந்த ஹதீஸை கூறுகின்றார்கள். இந்த ஹதீஸில் வெளிப்படையாக இது கனவு சம்பவம் என்றோ ஆன்மீக காட்சி என்றோ கூறவில்லை. ஆனால் ஹதீஸ் மொழி பெயர்ப்பாளர்கள் கனவில் என்பதை பிராக்கட்டில் போட்டுள்ளனர். காரணம் அந்த ஹதஸின் திராயத் அது கனவாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணியுள்ளனர். ஆகவே ஹதீஸின் கருத்தை பார்த்தே அது ஆன்மீக காட்சியா அல்லது இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

இரண்டாவது இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் "அல்லது" “அல்லது" என்ற சொல்லை கையாண்டுள்ளார்கள். இது வெளிப்படையாக நிகழும் ஓர் நிகழ்வு என்றால் நபி ஸல் அவர்கள் அதனை உறுதியாக கூறியிருப்பார்கள். தான் கண்டை கனவை இந்த ஹதீஸில் கூறும்போது ஈஸா அலை அவர்கள் "ஹஜ் அல்லது உம்ரா அல்லது இரண்டையுமே" என்று கூறுகின்றார்கள். இவ்வாறான ஓர் செய்தியை நாம் லைலத்துல் கத்ர் விஷயத்திலும் பார்க்கலாம். நபி ஸல் அவர்கள் லைலத்துல் கத்ரை கனவில் காண்கின்றார்கள், அதனை மக்களிடம் கூறும்போது எந்த நாள் என்பதை மறந்தாவாறு அவர்கள் உறுதியாக அந்த நாளை அறியாது இருந்தார்கள். ஆகவேதான் நீங்கள் இன்னென்ன நாட்களில் தேடிக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றார்கள். அதே போன்றுதான் இந்த ஹதீஸிலும் நபி ஸல் அவர்கள் தாம் கண்ட கனவை மக்களிடம் கூறும்போது அது உம்ராவா அல்லது ஹஜ்ஜா அல்லது இரண்டுமா என்பதை உறுதியாக அறியாது இவ்வாறு கூறி இருக்க வேண்டும். ஆகவே "அல்லது" என்ற சொல் இந்த ஹதீஸ் தாம் கண்ட கனவை நபி ஸல் அவர்கள் எடுத்து கூறியிருப்பதை காட்டுகிறது. அந்த கனவு நபி ஸல் அவர்களின் காலத்திலே நிறைவேறி விட்டது என்பதை "ஃபதாவா ஹதீஸிய்யஹ்" என்ற ஹதீஸின் வாயிலாக நாம் எடுத்து கூறி நிரூபித்துள்ளோம்.

அடுத்து எதிரிகள் இவ்வாறும் கூறலாம் அதாவது,  இது ஒரு ஆன்மீக காட்சி எனில் நபி ஸல் அவர்கள் அல்லாஹ்வின்மீது ஏன் சத்தியம் செய்து கூறவேண்டும், உறுதியாக நடைபெற்ற அல்லது நடைபெறப்போகின்ற ஒன்றை குறித்துதான் நபி ஸல் அவர்கள் ஹதீஸ்களில் சத்தியம் செய்துள்ளார்கள், கனவை குறித்தோ அல்லது ஆன்மீக காட்சி குறித்தோ அவர்கள் எங்கும் சத்தியம் செய்ததாக நாம் அறியவில்லை.

நமது பதில்: ஹஸ்ரத் நபி ஸல் அவர்கள் ஒரு ஹதீஸில் கூறுகின்றார்கள், "அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இப்போது (கவ்ஸர் எனும்) என்னுடைய திடாகத்தை காண்கிறேன், எனக்கு பூமியின் கருவூலங்களின் திறவுகோல்கள் "அல்லது" பூமியின் திறவுகோல்கள் கொடுக்கப்பட்டுள்ளன" (புகாரி 1344) என்று கூறுகின்றார்கள். கவ்ஸர் தடாகம் அவர்களுக்கு முன் ஆன்மீக காட்சியின் வாயிலாகவே காட்டப்பட்டிருக்க வேண்டும். அதே போன்று பூமியின் திறவுகோல் என்பது உவமையாக கூறப்பட்ட சொல் ஆகும் இதற்கு நேரடியான பொருளும் கொடுக்க முடியாது. ஆக தாம் காணும் ஆன்மீக காட்சியை ஓர் உவமையான கூற்றை இங்கு இறைவன் மீது ஆணையிட்டு கூறுகின்றார்கள் என்பது கவனிக்க தக்கது.

அடுத்து எதிரிகள் "ஹஸ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நான் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுடன் கஃபாவை தவாஃப் செய்து வந்து கொண்டிருந்தேன். அப்போது நபி ஸல் அவர்கள் ஒருவருக்கு கை கொடுத்ததை கண்டேன். ஆனால் அவர் யார் என்பது என் கண்ணுக்கு தெரியவில்லை. நான் கூறினேன், யா ரசூலுல்லாஹ் ஸல் ! நாம் உங்களை ஒருவருக்கு கை கொடுத்ததாக கண்டோம் ஆனால் அந்த நபரை நாம் காணவில்லை. (என்று கேட்டேன்) அதற்கு நபி ஸல் அவர்கள் கூறினார்கள், அந்த நபர் எனது சகோதரர் ஈஸா இப்னு மர்யம் ஆவார்கள். நான் அவர் தவாஃப் செய்வதை குறித்து காத்திருந்தேன். பிறகு நான் அவருக்கு சலாமும் கூறினேன். (அல் ஃபதாவா அல் ஹதீஸிய்யஹ் லில் இமாம் இப்னு ஹஜருல் ஹைஸ்மி, பக்கம் 154 மிஸ்ரி)

என்ற நாம் வைத்த இந்த ஹதீஸை சுட்டி காட்டி, ‘நபி ஸல் அவர்கள் மறைவான நிலையில் உள்ள ஈஸா நபிக்கு பௌதீகமான தனது கையை கொடுக்கின்றார்கள் அதை அனஸ் ரலி அவர்களும் காண்கிறார்கள்.இது எவ்வாறு ஆன்மீக காட்சியாகும், ஆன்மீக காட்சியில் பௌதீகமாக கை கொடுக்க முடியுமா?’ என்று கேள்வி கேட்க வாய்ப்புண்டு.

நமது பதில்: நபி ஸல் அவர்கள் உறக்கம் மற்றும் உறக்கம் இல்லாத நிலையில் (அதாவது ஆன்மீக காட்சியில்) இருக்கும்போது மிஃராஜ் பயணத்தை மேற்கொள்வதற்கு முன் அவர்களின் நெஞ்சு பிளக்கப்பட்டு இதயத்தை தங்க தட்டில் வைத்து ஸம்ஸம் நீரால் கழுவி அதனை மீண்டும் அதே இடத்தில் வைத்து தைத்து விட்டார்கள் வானவர்கள். அந்த தடயத்தை ஹஸ்ரத் அனஸ் ரலி அவர்கள் தாம் கண்டதாக கூறுகின்ற ஹதீஸ் முஸ்லிம் 261 இல் இடம்பெற்றுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது சிறு வயதில்) சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து நபியவர்களைப் பிடித்துப் படுக்கவைத்து,அவர்களின் நெஞ்சைத் திறந்து இருதயத்தை வெளியிலெடுத்தார்கள். ஓர் (சதைத்) துண்டை வெளியில் எடுத்து, "இதுதான் உம்மிடமிருந்த ஷைத்தானுக்குரிய பங்கு" என்று ஜிப்ரீல் கூறினார். பிறகு ஒரு தங்கத் தாம்பூலத்தில் இதயத்தை வைத்து ஸம்ஸம் நீரால் அதைக் கழுவினார். பின்னர் முன்பு இருந்த இடத்தில் இதயத்தைப் பொருத்தினார். (நபியவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த) அந்தச் சிறுவர்கள் நபியவர்களின் செவிலித் தாயிடம் ஓடிச் சென்று "முஹம்மத் கொல்லப்பட்டுவிட்டார்" என்று கூறினர். குடும்பத்தார் நபியவர்களை நோக்கி வந்தபோது (அச்சத்தால்) நபியவர்கள் நிறம் மாறிக் காணப்பட்டார்கள். அறிவிப்பாளர் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் ஊசியால் தைத்த அந்த அடையாளத்தை நான் பார்த்திருக்கிறேன்.

ஆகவே சில சமயம் ஆன்மீக காட்சி நிகழ்வு வெளிப்படையகாவும் அடையாளத்தை வெளிப்படுத்தி காட்டுவதுண்டு என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். பிறகு அந்த சம்பவத்தை, தான் கண்ட சாட்சியை ஹஸ்ரத் அனஸ் ரலி அவர்கள் பகிர்கின்றார்கள். இதிலிருந்து முஸ்லிம் ஹதீஸ் 2403 இல் வரக்கூடிய இந்த சம்பவம் நடந்து முடிந்த ஓர் சம்பவம் என்பதும், இந்த ஹதீஸிற்கும இந்த உம்மாத்தில் தோன்றக்கூடிய வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் மஹ்திக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதும் தெளிவாகிறது. ஃபல்ஹம்துலில்லாஹி அலா தாலிக் 

No comments

Powered by Blogger.