ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உண்மைத்துவம்; காலத்தின் தேவை மற்றும் வானின் உதவியின் ஒளியில்

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு .........
கண்ணியத்திற்குரிய கூட்டத்தின் தலைவர் மற்றும் வருகையாளர்களே!                  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு..
தாங்கள் செவிமடுத்ததை போன்று எனது சொற்பொழிவின் தலைப்பு ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உண்மைத்துவம் காலத்தின் தேவை மற்றும் வானின் உதவியின் ஒளியில் என்பதாகும்.
நான் எனது சொற்பொழிவின் முதல் பகுதியாகிய காலத்தின் தேவை தொடர்பாக சுருக்கமாக சிலவற்றை கூறுகிறேன். 
சகோதரர்களே! பதினான்காம் நூற்றாண்டின் காலகட்டம் இஸ்லாத்திற்கு துன்பம் துயரத்திற்கான காலமாகயிருந்தது இதற்கு முன்பு இதனைப்போன்ற ஒருகாலம் ஒருபோதும் வந்ததில்லை. இரண்டு வகையில் இஸ்லாம் மிகவும் கஷ்டங்களை எதிர்கொண்டது. உட்புறத்தில் முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டு மிகவும் தொலைவில் சென்று விட்டனர். இரண்டாவது வெளிப்புறமாக ஏனைய மதங்கள் மிகவும் தீவிரமாக இஸ்லாத்தின் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர். உட்புற கஷ்டங்கள் தொடர்பாக பார்த்தோம் என்றால் முஸ்லிம்களின் செயல் மற்றும் கொள்கைகளின் நிலை முற்றிலுமாக அழிந்து போயிருந்தது. தொழுகை, நோன்பு மற்றும் ஸக்காத்து போன்றவற்றுடன் எவ்வகையிலும் தொடர்பு இல்லாமல் இருந்தது. திருக்குர்ஆன் கைவிடப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டது. இலட்சக்கணக்கானோர் கலிமா கூட அறியாத நிலையில் இருந்தனர். கொள்கையின் நிலையினைப் பற்றி பார்த்தோமென்றால்  அல்லாஹ், அவனது ரஸூல், அவனது மலக்குகள் மற்றும் திருக்குர்ஆன் தொடர்பாக எப்படிபட்ட கொள்கைகளை ஏற்படுத்திக்கொண்டனர் என்றால் அது இஸ்லாத்தின் முகத்தை  சீர்குழைத்திருந்தது. ஆலிம்கள் இஸ்லாத்தின் அடித்தளத்தை வலுவிழக்கச்செய்வதில் மூழ்கியிருந்தனர். மக்கள் மிருகங்களை போன்று இருந்தனர். வசதிபடைத்தோர் ஊதாரிகளாகவும், ஆட்சியாளர்கள் நம்பிக்கை துரோகிகளாகவும் இருந்தனர். முஸ்லிம்களின் சிறப்பம்சமாக இருந்த நல்லொழுக்கம் இன்று அவர்களிடமிருந்து மிகவும் தூரம் சென்றுவிட்டது. இன்று மக்கள் இஸ்லாத்தில் எந்த விஷயங்களை விட்டுள்ளனர்? என்ற கேள்விக்கு பகரமாக  இஸ்லாத்தின் எந்த விஷயம் முஸ்லிம்களிடம் எஞ்சியுள்ளது? என்ற கேள்வி உருவாக்கியுள்ளது. (தஃவத்துல் அமீர்) மேலும் வெளிப்படையான கஷ்டங்களை பார்த்தோமென்றால் நாலாபுரத்திலிருந்தும் இஸ்லாம் ஆட்சேபனைக்கு உள்ளாகியிருந்தது. இலட்சக்கணக்கான குற்றச்சாட்டுகள் இஸ்லாத்தின் மீது வைக்கப்படுகின்றது. கோடிக்கணக்கில் இஸ்லாத்திற்கெதிரான புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. முஸ்லிம் நாடுகள் ஒருபுறம் பரஸ்பரம் சண்டையிட்டு கொண்டுயிருக்கின்றனர்  மறுபுறம் ஒவ்வொரு நாடும் உட்புற கூச்சல் குழப்பத்தின் உறைவிடமாக உருவெடுத்துள்ளன. மக்கள் அரசிற்கு எதிராகவும் அரசு மக்களின் உயிருக்கு விரோதியாகவும் உள்ளது.

சய்யிதுனா ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:-    உண்மையை தேடக்கூடியவர்களே! இது இஸ்லாத்திற்கு வானின் உதவி அவசியமாக இருந்த காலமாக இல்லையா? தற்போது வரை எந்ததெந்த துன்பங்கள் இஸ்லாத்தை பற்றிக்கொண்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியாதா? ....எந்தளவு மக்கள் இஸ்லாத்தை விட்டுவிட்டு கிறித்தவத்தில் சென்று சேர்ந்துள்ளனர். எந்தளவு நாத்திகராகவும், இயற்கை வணங்கியாகவும் ஆகியுள்ளனர். எந்தளவு இணைவைத்தலும், பித்அத்தும் ஏகத்துவம் மற்றும் சுன்னத்தின் இடத்தை அபகரித்துள்ளன. எந்தளவு இஸ்லாத்திற்கு எதிராக நூல்கள் எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. ஆக நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்! வெளிப்படையான தாக்குதலுக்கு எதிராக இந்த நூற்றாண்டில் இறைவன் புறமிருந்து ஒருவர் வரவேண்டிய அவசியம் இல்லையா? எந்தளவு துன்பங்கள் இஸ்லாத்தை நிர்பந்தப்படுத்துகின்றன, எந்தளவு நாலாபுறமுமிருந்து எதிரிகள் இஸ்லாத்தின் மீது அம்புகளை எய்கின்றனர் என்று சற்று பாருங்கள். இந்த அறிவு சார்ந்த, சிந்தனை சார்ந்த, போதனைகள் சார்ந்த, திட்டம் மற்றும் சூழ்ச்சிகள் சார்ந்த, தீமைகள் சார்ந்த, ஆசையூட்டுதல் சார்ந்த, பிரிவினை மற்றும் நாத்திகம் சார்ந்த, இணைவைத்தல் மற்றும் பித்அத் சார்ந்த இந்த அனைத்து புயல்களையும் கொஞ்சம் கண்களை திறந்து பாருங்கள். மேலும் உங்களால் முடியுமென்றால் இந்த ஒட்டுமொத்த புயல்களுக்கு நிகரான ஒரு நிலை முந்தைய காலத்தில் இருந்து எடுத்துக் கூறுங்கள். 
(ஆயினா கமாலாத்தே இஸ்லாம் பக்கம் 252)
சகோதரர்களே! மிகவும் அவசியமுள்ள இப்படிபட்ட காலத்தில் முஸ்லிம்களின் வழிகாட்டுதலுக்காக, அவர்களின் நேர்வழிக்காக இமாம் மஹ்தி வாக்களிக்கப்பட்ட மஸீஹ் தோன்றவேண்டியதிருந்தது. இதனைப்பற்றிய நற்செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள் அதாவது முஸ்லிம்களே! உங்களிடம் மஸீஹ் இப்னு மர்யம் தோன்றும்போது அது உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சிக்குரிய தருணமாக இருக்கும். அவர் மூலமாக இஸ்லாம் உலகளவில் வெற்றிபெறுவதற்கான செய்தியை அல்லாஹ்வும் அவனது ரஸூலும் இந்த உம்மத்திற்கு வழங்கியுள்ளனர். மேலும் மார்க்க அறிஞர்கள் அனைவரின் ஒன்றுபட்ட கருத்தும் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வருவார் என்பதாகும். ஆக அல்லாஹ் மற்றும் அவனது ரஸூலின் முன்னறிவிப்பிற்கேற்ப மேலும் மார்க்க அறிஞர்களின் கனவு மற்றும் கஷ்ஃப் காட்சிகளுக்கேற்ப பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மிகவும் அவசியமுள்ள காலத்தில் அல்லாஹ் இந்த உம்மத்தின் மீது மிகவும் கருணை காட்டியவாறு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி அலைஹிஸ்ஸலாம் அவர்களை வாக்களிக்கப்பட்ட மஸீஹாக அனுப்பினான்.
அன்னார் கூறுகின்றார்கள்:- 
நான் இஸ்லாமிய கொள்கைகள் கருத்துவேறுபாடுகளினால் நிரம்பி, கருத்துவேறுபாடு இல்லாத கொள்கையே இல்லை என்ற நிலைமையில் வெளிப்பட்டுள்ளேன். ...மேலும் நான் எனது உண்மைத்துவத்திற்கு வேறெதாவது ஆதாரம் கூறவேண்டிய அவசியமேயில்லை ஏனென்றால் காலத்தின் தேவையே ஆதாரமாக உள்ளது. (ஸரூரத்துல் இமாம் ரூஹானீ  கஸாயின் தொகுதி 13, பக்கம் 495)  நான் பூமியில் வாழக்கூடிய அனைவருக்காகவும் அனுப்பப்பட்டுள்ளேன் அவர்கள் ஆசியாவை சார்ந்தவராக இருந்தாலும் சரி, ஐரோப்பா அல்லது அமெரிக்காவை சார்ந்தவராக இருந்தாலும் சரி (தர்யாக்குல் குலூப் ரூஹானீ கஸாயின் தொகுதி 15, பக்கம் 515) மேலும் நான் இக்கால மக்களை என்பக்கம் அழைக்கவில்லை மாறாக அவர்கள் தான் என்னை தன்பக்கம் அழைத்துள்ளனர். (பயகாமே ஸுலுஹ் ரூஹானீ கஸாயின் தொகுதி 23, பக்கம் 486) ஆக நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயின் நன்றி செலுத்துங்கள், நன்றி சஜ்தாக்களில் விழுங்கள். இக்காலத்திற்காக காத்திருந்து உங்களது முன்னோர்கள் கடந்துவிட்டனர். எண்ணற்ற உயிர்கள் இதனை அடையும் ஆசையில் பயணம் செய்துள்ளனர் ஆனால் அந்த காலத்தை நீங்கள் அடைந்துள்ளீர்கள். ஆக இதற்கு தற்போது கண்ணியமளிப்பதும் கண்ணியமளிக்காமல் இருப்பதும், இதிலிருந்து பயனடைவதும் பயனடையாமல் இருப்பதும் உங்கள் கையில் தான் உள்ளது. மேலும் நான் தான் மார்க்கத்தை புத்தம்புதிதாக உள்ளத்தில் நிலைபெறச் செய்வதற்காக, சரியான நேரத்தில் படைப்பின சீர்திருத்ததிற்காக அனுப்பபட்டுள்ளேன் என்பதை மீண்டும் மீண்டும் கூறுவேன் இதனை வெளிப்படுத்துவதிலிருந்து நான் தவிர்ந்திருக்க மாட்டேன். 
(ஃபத்ஹே இஸ்லாம் ரூஹானீ  கஸாயின்  தொகுதி 3, பக்கம் 8)

சகோதரர்களே! நான் தற்போது சொற்பொழிவின் இரண்டாவது பகுதிக்கு வருக்கிறேன் அதாவது ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் உண்மைத்துவம் விண்ணின் உதவி மற்றும் ஆதரவின் ஒளியில் என்பதன் பக்கம் வருகிறேன். ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் வயது ஏறக்குறைய நாற்பதாக இருந்தபோது அல்லாஹ் அன்னாருக்கு அலைஸல்லாஹு பிகாஃபின் அப்தஹு என்ற இல்ஹாமை இறக்கினான். இது விண்ணின் உதவி மற்றும் ஆதரவின் முதல் இல்ஹாமாகும். இதனைத் தொடர்ந்து வரிசையாக உதவி மற்றும் ஆதரவிற்கான இல்ஹாம்கள் இறங்கியவாறு வெற்றிக்கான வாக்குறுதியும் வழங்கப்பட்டது. பின்னர் வாழ்நாள் முழுவதும் அல்லாஹ் தனது வாக்குறுதிக்கேற்ப அன்னாருக்கு மாபெரும் உதவி மற்றும் ஆதரவினை வழங்கினான்.
நான் விண்ணின் ஆதரவு தொடர்பாக ஒரு மகத்தான உதவி மற்றும் ஆதரவினை எடுத்துரைக்கின்றேன் அது சூரிய சந்திர கிரகணமாகும். நமது மஹ்தி உண்மையான மஹ்திக்கான வாதம் செய்யும்போது அவரது உண்மைதுவத்திற்கு ஆதரவாக அல்லாஹ் அவருக்காக சூரிய சந்திர கிரகணத்தை வெளிப்படுத்துவான் என சய்யிதுனா ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்கள் முன்னறிவித்திருந்தார்கள். சந்திரனுக்கு அதற்காக நிர்ணயிக்கப்பட்ட நாட்களில் முதல் நாளிலும், சூரியனுக்கு அதற்காக நிர்ணயிக்கப்பட்ட நாட்களில் மத்திய நாளிலும் கிரகணம் ஏற்படும் என க்கூறியிருந்தார்கள். சகோதரர்களே! ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் 1889 ஆம் ஆண்டு பையத் வாங்கத் துவங்கினார்கள் மேலும் ஜமாஅத்திற்கான அடிக்கல்லையும் நாட்டினார்கள். சரியாக ஐந்து வருடத்திற்குப் பிறகு அதாவது 1894 ஆம் வருடம் அல்லாஹ் அன்னாரது உண்மைத்துவதிற்கு ஆதரவாக சூரிய சந்திர கிரகணத்தை வெளிப்படுத்தினான். 1894 ஆம் ஆண்டு இந்த கிரகணம் ஆசியா. ஐரோப்பா மற்றும் ஆஃப்ரிக்கா  நாடுகளில் ஏற்பட்டது. அதற்கு அடுத்த வருடம் அதாவது 1895 ல் அமெரிக்காவிலும் ஏற்பட்டது.
சகோதரர்களே! மக்கள் அன்றைய நாட்களில் முஸ்லிம்கள் அழிந்துவிட்டனர், பதினான்காம் நூற்றாண்டு துவங்கி விட்டது. இமாம் மஹ்தி தோன்றவுள்ளார் எனக் கூறிவந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் அவரைப் பற்றியே பேசப்பட்டது. இந்த அடையாளம் வெளிப்பட்டதும் நூற்றுக்கணக்கான நல்லடியார்கள் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் பையத்தில் இணைந்தனர். ஒருபுறம் காதியானில் அஹ்மதிகள் மத்தியில் கொண்டாடட்டம் நிலவியது மறுபுறம் எதிரிகள் துன்பம் மற்றும் துயரத்தில் வீழ்ந்திருந்தனர். ஆலிம்கள் மிர்ஸா குலாம் அஹ்மது மஸீஹ் மற்றும் மஹ்திக்கான வாதம் செய்து கொண்டு நிற்கிறார் அவருக்காக சூரிய சந்திர கிரகண அடையாளமும் வெளிப்பட்டு உள்ளது என மிகவும் இழிவு மற்றும் அவமானத்திற்கு ஆளாகிக் கொண்டிருந்தனர். ஒரு நபர் ஒரு மவ்லவியிடம் சூரிய சந்திர கிரகணம் பற்றிய ஹதீஸைப் பற்றி கேட்டார் அதற்கு அந்த மவ்லவி ஹதீஸ் சரியானது தான் ஆனால் மிர்ஸா சாஹிபின் வலையில் வீழ்ந்து விடாதே என்று கூறினார். பகைவர்களாக இருந்த ஆலிம்கள் மக்கள் தற்போது மிர்ஸா சாஹிபை ஏற்றுக்கொண்டு விடுவார்கள் என மிகவும் துன்பத்தில் ஆழ்ந்திருந்தனர்.
சகோதரர்களே! பகைவர்களாக இருந்த ஆலிம்களிடம் இந்த ஹதீஸை சந்தேகத்திற்குரிய வட்டத்தில் கொண்டு வந்து அதன் மீது ஆட்சேபனை செய்வதை தவிற வேறு வழியில்லாமல் இருந்தது. அவர்கள் இந்த ஹதீஸை பலவீனமானது எனக் கூறினர். அதற்கு பதிலளித்தவாறு ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறினார்கள்:- 
மிகப்பெரிய ஹதீஸ் வல்லுனருடைய நூலிருந்து இந்த ஹதீஸ் பலவீனமாது என நிரூபித்தால் நாம் அவருக்கு உடனடியாக நூறு ரூபாயை அன்பளிப்பாக தருகின்றோம். அல்லது முன்னதாக யாரிடமாவது அமானிதமாக கொடுத்து வைக்க கூறினாலும் அதையும் செய்கிறோம். அவ்வாறு இல்லையென்றால் இறைவனுக்கு அஞ்சுங்கள் என்னைப் பொய்ப்படுத்த வேண்டுமென்பதற்காக இறைஞானம் பெற்ற ஆலிம்கள் எழுதிய சஹீஹானா ஹதீஸுகளை பலவீனமானதாக மாற்றாதீர்கள். 
(தொஹ்ஃபா கோல்டுவியா ரூஹானீ கஸாயின் தொகுதி 17, பக்கம் 133,134)
சகோதரர்களே! இரண்டாவது குற்றச்சாட்டு இதுவாகும் அதாவது சந்திர கிரகணம் ரமளானின் முதல் இரவில் ஏற்படவில்லை மாறாக பதினான்காம் நாளில் தான் ஏற்பட்டது அதேபோன்று சூரிய கிரகணம் ரமளானில் பதினைந்தாவது நாளில் ஏற்படவில்லை மாறாக இருபத்தி எட்டாவது நாளில் தான் ஏற்பட்டது என ஆட்சேபனை செய்கின்றனர் இதற்கு பதிலளித்தவாறு ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:- 
உலகம் தோன்றியதிலிருந்து இறைவன் சந்திர கிரகணுக்காக மூன்று இரவுகளை இயற்கை சட்டத்தில் நிர்ணயித்து வைத்துள்ளான் அதாவது பதிமூன்று பதினான்கு மற்றும் பதினைந்து ஆகியவை......... மேலும் சூரிய கிரகணுக்காக மூன்று நாட்கள் அதாவது கமரி (சந்திர) மாதங்களில் இருபத்தியேழு, இருபத்தியெட்டு இருபத்திதொன்பது ஆகிய நாட்களை இறைவன் இயற்கை சட்டத்தில் நிர்ணயித்து வைத்துள்ளான் ... (ஹக்கீகத்துல் வஹீ ரூஹானீ கஸாயின் தொகுதி 22, பக்கம் 203) ஆக சந்திர கிரகணத்தின் முதல் நாள் என்பது  எப்போதும் பதிமூன்றாம் நாள் தான் என அறியப்படும் மேலும் சூரிய கிரகணத்தின் மத்திய நாள் என்பது எப்போதும் 28ஆம் ஆகும். 
(தொஹ்ஃபா கோல்டுவியா ரூஹானி கஸாயீன் தொகுதி 17, பக்கம் 139)
சகோதரர்களே! எவ்வாறு அபூல்ஹக்கம் அபூஜஹல் ஆகினானோ அவ்வாறு ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் பகைமையில் ஆலிம்களை அல்லாஹ் ஜாஹிலாக்கி விட்டான்  அதாவது அறிவீனர்களாக ஆக்கிவிட்டான். முதலில் அவர்கள் இயற்கை சட்டத்திற்கு எதிராக கேட்கின்றனர் அதாவது முதல்நாள் சந்திரனுக்கு கிரகணம் ஏற்படவேண்டுமென கேட்கின்றனர். இரண்டாவது இந்த ஹதீஸில் வந்துள்ள கமர் என்ற வார்த்தையை அவர்கள் பார்ப்பதில்லை. ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகிறார்கள் இந்த ஹதீஸில் ஹிலால் என்ற வார்த்தையில்லை மாறாக கமர் என்ற வார்த்தைதான் வந்துள்ளது மூன்று நாட்கள் வரை நிலவை ஹிலால் என்று தான் அழைப்பார்கள் அதன் பின்னர் தான் கமர் என்று அழைப்பர் என்றார்கள்.
அன்னார் கூறுகின்றார்கள்:- 
இந்த விஷயத்தில் அரபு நாட்டைச் சார்ந்தவர்கள் இன்றைய நாள் வரை ஒன்றுபட்டுள்ளார்கள் மேலும் எந்தவொரு அரபியும் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுமில்லை, மறுப்பதுமில்லை. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் காமூஸ், தாஜூல் உரூஸ், ஸஹாஹ் மற்றும் லிஸானுல் அரப் என்ற பெயரைக் கொண்ட பெரிய நூல் மேலும் அனைத்து அகராதிகள் மற்றும் இலக்கணம், கவிஞர்களின் கவிதைகள், முன்னவர்களின் கஸீதாக்கள் போன்றவற்றை கவனமாக பாருங்கள்.... நீங்கள் இதற்கு எதிராக நிரூபித்தால் நான் ஆயிரம் ரூபாய் தருகிறேன். ஆக நீங்கள் நபிமார்களின் தலைவரின் கூற்றை, சான்றோர்களின் கூற்றுக்களை சரியான பொருளிலிருந்து மாற்றாதீர்கள். பலவீனமாவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் முழுமை பெற்றவாராகிய (நபி(ஸல்)) அவர்களின் மகத்துவத்தில் தலையிடாதீர்கள். இது அரபி மற்றும் அரபியல்லாதவர்கள் பேசக்கூடியதை விட மிகவும் தெளிவானதும், கிழக்கு மற்றும் மேற்கிலுள்ளவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமாகும். அல்லாஹ் மற்றும் அவனது நபியின் கண்ணியத்தை பார்க்க மாட்டீர்களா? உங்களுக்கு என்னவாயிற்று?
(நூருல் ஹக் ரூஹானீ கஸாயின் தொகுதி 8,பக்கம் 197)
சய்யிதுனா ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:- உலகம் படைத்ததிலிருந்து நபித்துவ வாதம் செய்த எவருக்காகவும் இந்த அடையாளம் வெளிப்படவில்லை. அவ்வாறு யாராவது நிரூபித்தால் அவருக்கு அன்னார் ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாக தருவதாக கூறினார்கள். அன்னார் கூறுகின்றார்கள்:-
உங்களால் இதனைப்போன்ற ஒன்றை இதற்கு முந்தைய காலத்தில் இருந்து எடுத்துக் காட்ட முடியுமா? தற்போது நீங்கள் பார்ப்பது போன்று ஏதாவது ஒரு நூலில் ஒருவர் தன்னை இறைவன் புறமிருந்து வந்துள்ளதாக கூறி மேலும் அக்காலத்தில் ரமளான் மாதத்தில் சூரிய, சந்திர கிரகணம் நிகழ்ந்ததாக படித்துள்ளீர்களா? அவ்வாறு இருந்தால் கூறுங்கள். உங்களுக்கு ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாக தருகிறேன். ஆக நிரூபியுங்கள் அன்பளிப்பை பெற்றுக் கொண்டு செல்லுங்கள். .....அவ்வாறு நிரூபிக்க முடியவில்லை யென்றால் உங்களால் ஒருபோதும் நிரூபிக்க முடியாது. ஆகையால் தீயவர்களுக்காக தயார் செய்து வைக்கப்பட்டுள்ள நெருப்பிற்கு அஞ்சுங்கள்.
(நூருல் ஹக் ரூஹானீ கஸாயின் தொகுதி 8, பக்கம் 211)

சகோதரர்களே! நான் மற்றொரு மகத்தான ஆதரவினைப் பற்றி கூறுகிறேன் அது முன்னறிவிப்புகள் ஆகும். அல்லாஹ் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு அன்னாருடைய உண்மைத்துவத்திற்கு மகத்தான சான்றாக அடையாளங்கள் மற்றும் அற்புதங்கள் நிறைந்த முன்னறிவிப்புகளை வழங்கியுள்ளான். ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்: 
நுபுவத்தின் அடையாளங்களில் மகத்தான அடையாளமாகவும் மற்றும் அற்புதமாகவும் முன்னறிவிப்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. முன்னறிவிப்புக்கு நிகரான எந்த அற்புதமுமில்லை. ஆகையால் இறைவனது நபிமார்களை அவர்களது முன்னறிவிப்புகள் மூலமாக கண்டறிய வேண்டும். 
(லெக்சர் லுதியானா ரூஹானீ கஸாயின் தொகுதி 20, பக்கம் 253)
அல்லாஹ் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு ஆயிரக்கணக்கான முன்னறிவிப்புகளை வழங்கியுள்ளான். அன்னார் தனது நூல் தர்யாக்குல் குலூபி‌ல் 75, நுஸூலுல் மஸீஹில் 150 மற்றும் ஹக்கீகத்துல் வஹீயில் 208 முன்னறிவிப்புகளை அடையாளமாகவும், அற்புதங்களாகவும், விண்ணின் ஆதரவின் உதாரணமாகவும் எழுதியுள்ளார்கள்.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள்  கூறுகின்றார்கள்:- 
நீங்கள் எனது நூல் நுஸூலுல் மஸீஹை பாருங்கள் உங்களுக்கு இறைவன் அடையாளங்களை காண்பிப்பதில் எவ்வித பாரபட்சத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது புரியவரும். ......எவ்வாறு பூமியின் ஓர் பெரும் பகுதி கடலினால் நிரம்பியுள்ளதோ அதேபோன்று இந்த ஜமாஅத்தும் இறையடையாளங்களால் நிரம்பியுள்ளது. இறைவனின் ஏதாவது ஓர் அடையாளமாவது இறங்கப்படாத நாட்களே இல்லை. 
(தஜல்லியாத்தே இலாஹியா ரூஹானீ  கஸாயின் தொகுதி 20, பக்கம் 411)

ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:- 
நான் கூறுகிறேன் அதாவது நம்பிக்கையாளருக்கு ஒரு சாட்சி போதுமானதாகும். அதிலேயே அவரது உள்ளம் நடுங்கிவிடும். ஆனால் இங்கு ஒன்றல்ல மாறாக நூற்றுக்கணக்கான அடையாளங்கள் இருக்கின்றன மேலும் என்னால் அதனை எண்ணமுடியாது என உறுதியாக கூறுகிறேன். 
(லெக்சர் லுதியானா ரூஹானீ  கஸாயின் தொகுதி 20, பக்கம் 257)

சகோதரர்களே! ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் அடையாளங்களுக்கு மேல் அடையாளங்களை காட்டினார்கள் ஆனால் பகைவர்கள் அதனை மறுத்துக் கொண்டே சென்றார்கள். முபாஹிஸாவில் மவ்லவி ஸனாவுல்லாஹ் அம்ரத்ஸரி மிகவும் வெட்கமின்றி மிர்ஸா சாஹிபின் அனைத்து முன்னறிவிப்புகளும் பொய்யாக வெளிப்பட்டது என பொய் கூறினார் மேலும் இதனைத் தவிர பல பொய்களை கூறினார்.
இதற்கு பதிலாக ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தனது நூல் இஃஜாஸே அஹ்மதி இயற்றினார்கள். அதில் மவ்லவி ஸனாவுல்லாஹ் அம்ரத்ஸரியின் பொய்களுக்கு பதிலாக அன்னார் இவர் உண்மையாளராக இருந்தால் காதியான் வந்து ஏதாவது ஒரு முன்னறிவிப்பை பொய்யாக நிரூபித்துக்காட்டட்டும் மேலும் ஒவ்வொரு முன்னறிவிப்பிற்கும் நூறு ரூபாய் வழங்கப்படும் மேலும் பயணச் செலவு தனியாக வழங்கப்படும் என எழுதினார்கள்.
(இஃஜாஸே அஹ்மதி ரூஹானீ கஸாயின் தொகுதி 19, பக்கம் 118)
அன்னார் கூறினார்கள்:- 
நினைவில் கொள்ளுங்கள் நுஸூலுல் மஸீஹ் என்ற எனது நூலில் நான் 150 முன்னறிவிப்புகளை எழுதியுள்ளேன். இவ்வாறு அது பொய்யென நிரூபணமாகும் பட்சத்தில் மவ்லவி ஸனாவுல்லாஹ் சாஹிப் அவர்கள் பதினையாயிரம் ரூபாயை பெறுவார்கள். மேலும் பொய் கூறுவதிலிருந்து இரட்சிப்பும் பெறுவார்கள். மேலும் ஒவ்வொரு முன்னறிவிப்பிற்கும் நூறு ரூபாய் என்ற இதே வாக்குறுதியுடன்  நாம் ஏனைய நமது முன்னறிவிப்புகளை ஆதாரத்துடன் அவர்களிடம் வழங்குவோம். தற்போது ஒரு இலட்சத்தையும் விட அதிகமாக எனது ஜமாஅத் உறுப்பினர்கள் உள்ளனர். மவ்லவி ஸனாவுல்லாஹ் அம்ரத்ஸரிக்காக என்னைப் பின்பற்றக்கூடியவர்களிடம் ஒவ்வொரு ரூபாய் வாங்கினாலும் ஒரு இலட்சம் ரூபாய் சேர்ந்து விடும். இவை அனைத்தும் அவருக்கு வழங்கப்படும். இரண்டு பைசாவிற்காக வீடுவீடாக மிகவும் மோசமான நிலையில் சுற்றுகிறார் இறைவனது தண்டனை அவர் மீது இறங்கியுள்ளது. மரணித்தவர்களுக்கு கஃபன் அணிவது அல்லது மக்களுக்கு அறிவுரை கூறுவதன் மூலம் கிடைக்கப்பெறும் பணத்தை கொண்டு வாழ்ந்து வருகிறார். அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் கிடைத்து விட்டால் அது அவருக்கு சொர்க்கமாகும். மேலும் அவர் எனது இந்த கூற்றின் பக்கம் கவனம் செலுத்தவில்லையென்றால் மேலும் நிபந்தனைக்கேற்ப காதியான் வரவில்லையென்றால் அவர் முபாஹிஸாவின் போது பேசியது மேலும் வெட்கமில்லாமல் பொய் கூறியது (அவர் மீது) சாபமாகும். 
(இஃஜாஸே அஹ்மதி ரூஹானீ கஸாயீன் தொகுதி 19, பக்கம் 132)

ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:-
எனது எந்த முன்னறிவிப்பும் நிறைவேறாமலில்லை ....எனது நாவிலிருந்து வெளிவந்த ஏதாவது ஒரு  முன்னறிவிப்பு நிறைவேறாமல் இருந்ததாக நிரூபிப்பதற்கு ஒருவர் தேடி தேடி பார்த்து மரணித்துப்போனாலும் அவருக்கு அவ்வாறு ஒன்றும் கிடைக்காது.....எனது ஆயிரக்கணக்கான வெளிப்படையான முன்னறிவிப்புகள் மிகவும் தெளிவாக நிறைவேறியுள்ளது என என்னால் உறுதியாக கூறமுடியும் அதற்கு இலட்சக்கணக்கான மக்கள் சாட்சியாவர்கள். இதனைப்போன்ற ஒரு உதாரணத்தை முந்தைய நபிமார்களில் நீங்கள் தேடினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர வேறெவரிடமும் அதனைக் காண முடியாது. 
(கிஷ்தி நூஹ் ரூஹானீ கஸாயின் தொகுதி 19, பக்கம் 6)
அன்னார் கூறுகின்றார்கள்:- 
இறைவன் எந்தளவு என்னிடம் உரையாடுகின்றானோ எந்தளவு மறைவானா விஷயங்களை வெளிப்படுத்துகின்றானோ இதனைப் போன்ற அருள் ஹிஜ்ரி பதிமூன்று நூற்றாண்டில் இன்று வரை எவருக்கும் வழங்கப்படவில்லை. யாராவது இதனை மறுத்தால் அதனை நிரூபிப்பது அவரது கடமையாகும். 
(ஹக்கீகத்துல் வஹீ ரூஹானீ கஸாயின் தொகுதி 22,பக்கம் 406)
அன்னார் கூறுகின்றார்கள்:- 
எனக்கு எதிரில் உலகிலுள்ள அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து யாருக்கு இறைவன் மறைவான விஷயங்களை வெளிப்படுத்துகின்றான், யாருக்கு பெரிய பெரிய அடையாளங்களை காட்டுகின்றான் என்று ஆய்வு செய்தால் நான் இறைவன் மீது ஆணையிட்டுக் கூறுகின்றேன் நான் தான் வெற்றி பெறுவேன். 
(ஹக்கீகத்துல் வஹீ ரூஹானீ கஸாயின் தொகுதி 22, பக்கம் 181)
அன்னார் கூறுகின்றார்கள்:- 
நான் இறைவனிடமிருந்து உறுதியான அறிவைப்பெற்று கூறுகிறேன் இந்த அனைத்து மவ்லவிகளும் அவர்களின் பிரதிநிதிகளும் மேலும் அவர்களின் முல்ஹிம்களும் (இல்ஹாம் இறங்கக்கூடியவர்) ஒன்றிணைந்து இல்ஹாமிய விஷயத்தில் என்னுடன் போட்டியிட விரும்பினால் இறைவன் அவர்கள் அனைவருக்கும் எதிராக எனக்கு வெற்றியை வழங்குவான் ஏனென்றால் நான் அவன் புறமிருந்து வந்தவனாவேன். 
(அஞ்ஜாமே ஆத்தம் ரூஹானீ கஸாயின் தொகுதி 11, பக்கம் 341)
சகோதரர்களே! நான் மற்றொரு மகத்தான விண்ணின் அடையாளம் பற்றி எடுத்துரைக்கின்றேன் அது அல்லாஹ்வின் புறமிருந்து அன்னாருக்கு வழங்கப்பட்ட இல்மே குர்ஆன் அதாவது திருக்குர்ஆன் ஞானமாகும்.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:- 
இன்றிலிருந்து ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பு  பராஹீனே அஹமதிய்யாவில் அர்ரஹ்மானு அல்லமல் குர்ஆன் என்ற இல்ஹாம் பதியப்பட்டுள்ளது. இந்த இல்ஹாம் மூலம் இறைவன் எனக்கு திருக்குர்ஆனின் ஞானத்தை வழங்கியுள்ளான். மேலும் என்னை கடலைப் போன்று அறிவு மற்றும் ஞானத்தினால் நிரப்பிவிட்டான். மேலும் இந்த காலத்தில் இறைஞானம் மற்றும் இறையன்பில் உமக்கு நிகரான அறிவு மற்றும் ஞானம் பெற்றவர் யாருமில்லை என மீண்டும் மீண்டும் எனக்கு இல்ஹாம் இறக்கினான். 
(ஸரூரத்துல் இமாம் ரூஹானீ கஸாயின் தொகுதி 13, பக்கம் 502)
அன்னார் கூறுகின்றார்கள்:- 
மற்றொரு இறையடையாளமான முன்னறிவிப்பு அர்ரஹ்மானு அல்லமல் குர்ஆன் என்பதாகும். இந்த வசனத்தில் அல்லாஹ் திருக்குர்ஆனின் ஞானத்தை வழங்குவதாக வாக்குறுதியளித்துள்ளான். இந்த வாக்குறுதியை எவ்வாறு நிறைவேற்றினான் என்றால் தற்போது திருக்குர்ஆன் ஞானத்தில் என்னுடன் போட்டியிட எவருக்கும் ஆற்றல் இல்லை. நான் உண்மையாக கூறுகிறேன் அதாவது இந்த நாட்டில் உள்ள மவ்லவிகளில் எவரேனும் ஒருவர் திருக்குர்ஆன் ஞானத்தில் என்னுடன் போட்டியிட விரும்பினால் நான் ஒரு அதிகாரத்திற்கு தஃப்ஸீர் (விளக்கவுரை) எழுதுகிறேன் பகைவராகிய அவரும் எழுதட்டும் ஆனால் அவர் மிகவும் இழிவடைவார் போட்டியிட முடியாமல் செல்வார். இதன் காரணத்தால் தான் பலமுறை அழைத்தபோதும் கூட மவ்லவிகள் எவரும் இதன் பக்கம் திரும்பவில்லை. ஆக இது  நேர்மை மற்றும் ஈமான் கொண்டவருக்கு ஒரு மகத்தான அடையாளமாகும். 
(அஞ்ஜாமே ஆத்தம் ரூஹானீ கஸாயின் தொகுதி 11, பக்கம் 291)
சகோதரர்களே! மவ்லவி முஹம்மது ஹுஸைன் பட்டாலுவி மிகவும் அநீதி மற்றும் நேர்மையின்மையின் வழியினைப் பின்பற்றியவாறு மக்களிடம் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் அரபி கல்வி மற்றும் திருக்குர்ஆன் ஞானம் பற்றி முற்றிலும் அறியாதவராக இருக்கிறார் என கூறிவந்தார். மக்களை வழிகேட்டிலிருந்து காப்பாற்றுவதற்கு முஹம்மது ஹுஸைன் பட்டாலுவியின் பொய்யை வெளிப்படுத்த ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் அவரை தஃப்ஸீர் போட்டிக்கு அழைத்தார்கள் ஆனால் முஹம்மது ஹுஸைன் பட்டாலுவி பல்வேறு சாக்குபோக்குகளையும் வீணாண நிபந்தனைகளை கூறி ஓடிவிட்டார்.
உண்மையை நிரூபிப்பதற்காக ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் இரண்டாவது முறையாக அவரை போட்டிக்கு அழைத்தார்கள் இதற்காக அன்னார் கராமாத்துஸ் ஸாதிக்கீன் என்ற நூலை (அரபியில்) சிலநாட்களிலேயே எழுதி வெளியிட்டார்கள். அதில் அதிகாரம் ஃபாத்திஹாவின் தஃப்ஸீரை எழுதினார்கள் மேலும்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புகழில் 661 கவிதை வரிகள் கொண்ட நான்கு கஸீதாக்களை எழுதினார்கள் மேலும் ஒரு மாதத்திற்குள் அதனைப் போன்றறொன்றை எழுதுவதற்கு குறிப்பாக மவ்லவி முஹம்மது ஹுஸைன் பட்டாலுவியையும் பொதுவாக அனைத்து மவ்லவிகளையும் அழைத்தார்கள்.
ஒருவேளை மூன்றாவது நபர் மூலமாக எனது கவிதைகள் மற்றும் எனது தஃப்ஸீரை விட அவர்களது கவிதைகளும் அவர்களது தஃப்ஸீர்களும் சிறந்தது என நிரூபணமாகி விட்டால், அதனை அவர்கள் நூல் வடிவில் வெளியிடும் நாட்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு அப்படிபட்ட கவிதைகள் மற்றும் தஃப்ஸீரை பத்திரிகை வடிவில் வெளியிடுபவருக்கு நான் ஆயிரம் ரூபாயை ரொக்கமாக தருகிறேன். 
(கராமாத்துஸ் ஸாதிக்கீன் ரூஹானீ கஸாயின் தொகுதி 7, பக்கம் 49)      
அன்னார் கூறுகிறார்கள்:- 
இந்த எளியவன் மீண்டும் மீண்டும் ஈமானுக்கான வெளிப்பாட்டை செய்த பிறகும் என்னை காஃபிர் , முர்தத் என்று கருதும், தலையில் ஆணவம் கொண்டுள்ள அந்த அனைத்து மவ்லவிகளும் மேலும் தன்னை பெரிதாகக் கருதக்கூடியவர்களும் இந்த போட்டிக்கு அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் டெல்லியில் வசிப்பவராக இருந்தாலும் சரி, லக்னோவில் வசிப்பவரானாலும் சரி, லாஹூர் அல்லது வேறெதாவது நகரத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி ....தற்போது அவர்களுடைய வெட்கம் மற்றும் நாணம் அவர்களிடம் எதிர்பார்பதெல்லாம் அவர்கள் இந்த போட்டிக்கு முன்வர வேண்டும் மேலும் ஆயிரம் ரூபாயை பெறவேண்டும் என்பதாகும்.                           
(கராமாத்துஸ் ஸாதிக்கீன் ரூஹானீ கஸாயீன் தொகுதி 7, பக்கம் 63) 
சகோதரர்களே! இதன் பிறகு அன்னார் பீர் மஹர் அலி ஷாஹ் கோல்டுவியாவிற்கு குறிப்பாகவும் ஏனைய ஆலிம்களுக்கு பொதுவாகவும் லாஹூரில் ஒரு கூட்டம் நடத்தி திருக்குர்ஆனின் நாற்பது வசனங்களுக்கு அரபியில் தஃப்ஸீர் எழுதும் போட்டிக்கு அழைத்தார்கள். பீர் மஹர் அலி பல்வேறு சாக்குபோக்குகளை கூறி ஓடிவிட்டார் மேலும் மக்களுக்கு தான் போட்டிக்கு தயாராக இருப்பதாகவும், தன்னால் போட்டியிட முடியுமெனவும் ஏமாற்றி வந்தார். சகோதரர்களே! நபியின் பணி மீண்டும் மீண்டும் தனது சான்றை நிரூபிப்பதாகும் அதன் மூலம் எவரிடம் நேர்வழியினை அடைவதற்கான தன்மை  இருக்குமோ அவர்கள் நேர்வழி பெறவேண்டும். இந்த வகையில் ஆதாரத்தை நிரூபிப்பதற்காக இரண்டாவது முறை அன்னார் அவர்களை அதிகாரம் ஃபாத்திஹாவின் தஃப்ஸீர் எழுதும் போட்டிக்கு அழைத்தார்கள். அன்னார் இதற்காக 70 நாட்களை காலஅவகாசமாக நிர்ணயித்தார்கள். இந்த நாட்களில் நீங்களும் வீட்டில் அமர்ந்து அதிகாரம் ஃபாத்திஹாவிற்கு தஃப்ஸீர் எழுதுங்கள் நானும் எழுதுகின்றேன் என்றார்கள். அன்னார் கூறுகின்றார்கள்:- பகைவர்களாகிய அவர்கள் இந்த தஃப்ஸீர் எழுதுவதற்கு உலகின் அனைத்து ஆலிம்களிடமிருந்தும் உதவி பெறுவதற்கு அனுமதி உண்டு. மேலும் இதற்காக அரபுநாட்டின் அறிஞர்களையும் வல்லுனர்களையும் அழைத்துக் கொள்ளட்டும். மேலும் ஏனைய அரபு மொழி பேராசிரியர்களிடமிருந்து கூட உதவி பெற்றுக்கொள்ளட்டும். டிசம்பர் 15, 1900 முதல் 70 நாட்கள் நம் இருவருக்கும் உள்ள காலளவு ஆகும். மேலும் எனக்கு எதிராக தஃப்ஸீர் எழுதிய பின்னர் அரபு நாட்டின் மூன்று மொழி வல்லுனர்கள் அந்த தஃப்ஸீரை சொற்செறிவு மற்றும் பொருட்செறிவு. நிறைந்ததாகவும் ஞானம் நிறைந்ததாக கருதினால் நான் ஐநூறு ரூபாயை ரொக்கமாக அவருக்கு வழங்குவேன் மேலும் எனது அனைத்து நூல்களையும் எரித்து விடுவேன் மேலும் அவரது கையில் பையத் செய்வேன். 
(அர்பயீன் 4 ரூஹானீ கஸாயின் தொகுதி 17, பக்கம் 449) 
சகோதரர்களே! குறிப்பிட்ட காலஅவகாசத்திற்குள் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் இஃஜாஸுல் மஸீஹ் என்ற பெயரில் அதிகாரம் ஃபாத்திஹாவிற்கான தஃப்ஸீரை  அரபியில் சொற்ச்செறிவு மற்றும் பொருட்செரிவுடன் எழுதி வெளியிட்டார்கள் ஆனால் பீர் மஹர் அலி அவர்களால் எதுவும் எழுதி வெளியிட முடியவில்லை. வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:- 
ஆக அவரது பெயர் மஹர் அலி இல்லை மாறாக மொஹர் அலி ஆகும் ஏனென்றால் அவர் தனது இயலாமை மற்றும் அமைதியாக இருந்ததன் மூலம் இந்த நூல் இஃஜாஸுல் மஸீஹின் உயர்வை உறுதிசெய்து விட்டார். 
(நுஸூலுல் மஸீஹ் ரூஹானீ கஸாயின் தொகுதி 18, பக்கம் 432)
அன்னார் கூறுகின்றார்கள்:- 
எனது உயிர் யார் கையில் உள்ளதோ அவன் மீது ஆணையாக! எனக்கு திருக்குர்ஆனின் அறிவு மற்றும் ஞானத்தை புரிவதில் ஒவ்வொரு ஆன்மாவின் மீது வெற்றி வழங்கப்பட்டுள்ளது. நான் திருக்குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவதில் போட்டிக்காக மீண்டும் மீண்டும் அழைத்ததற்கேற்ப எனக்கு எதிரில் ஏதாவது ஒரு மவ்லவி வந்தால் இறைவன் அவரை இழிவுபடுத்துவான் தோல்வியுற செய்வான். ஆக திருக்குர்ஆன் அறிவு எனக்கு வழங்கப்பட்டிருப்பது அல்லாஹ்வின் ஓர் அடையாளமாகும். 
(சிராஜே முனீர் ரூஹானீ கஸாயின் தொகுதி 12, பக்கம் 41)
சகோதரர்களே! கணக்கர் இலாஹி பக்ஷ் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் சீடராக இருந்தார். தூய்மை மற்றும் பற்றுணர்வில் மிகைத்திருந்தார். வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் 1889 ஆம் ஆண்டு பையத்தின் மூலம் ஜமாஅத்தின் அடிகல்லை நாட்டினார்கள் தனது சீடர்களை பையத்தில் இணையும்படி கூறியபோது திடீரென்று இலாஹி பக்ஷ் வழிதவறிவிட்டார். அவர் காதியான் வந்து வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களிடம் கொஞ்சமும் வெட்கமின்றி தனது கனவு மற்றும் இல்ஹாம்களை கூறினார். மேலும் ஒரு கனவில் நான் உங்களிடம் ஏன் பையத் செய்ய வேண்டும் தாங்கள் என்னிடம் பையத் செய்யுங்கள் என கூறினேன் என்றார். வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தனது அந்த பழைய சீடர் அழிந்து போவதிலிருந்து காப்பாற்றுவதற்காக மகத்துவமிக்க நூல் ஸரூரத்துல் இமாம் (இமாமின் தேவை) என்ற நூலை இயற்றினார்கள். அன்னார் கூறுகின்றார்கள்:- 
எனது அன்பரே! நாம் அறிவு, ஞானம் மற்றும் வானின் அருட்களுக்கு பசித்தவராகவும் தாகித்தவராகவும் உள்ளோம். ஒரு கடலை அருந்திய பின்னரும் வயிறு நிரம்பவில்லை. ஆக நம்மை ஒருவர் அடிமையாக்க விரும்பினால் மிகவும் எளிய வழியாக பையத்தின் அர்த்தத்தை புரிந்து அதன் சரியான போதனையை மனதில் வைத்து இந்த வியாபாரத்தை நம்மிடம் செய்து கொள்ளலாம். மேலும் நம்மிடம் இல்லாத அறிவும், ஞானமும் விண்ணின் அருட்களும் அவரிடம் இருக்குமென்றால் மேலும் நமக்கு வழங்கப்படாத திருக்குர்ஆன் அறிவு அவருக்கு வழங்கப்பட்டிருக்குமென்றால் அந்த சான்றோர் எம்மிடம் சீடர் மற்றும் கட்டுப்படுதலுக்கான கையை எடுத்துக் கொள்ளட்டும். மேலும் அந்த ஆன்மீக அறிவு, திருக்குர்ஆனின் ஞானம் மற்றும் வானின் அருட்களை எமக்கும் வழங்கட்டும். நான் அதிகமாக கஷ்டம் கொடுக்க விரும்பவில்லை. நமது நண்பர் ஏதாவது ஒரு கூட்டத்தில் அதிகாரம் இக்லாஸின் ஞானத்தை எடுத்துரைக்கட்டும் அதனைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக நாம் எடுத்துரைக்கவில்லையென்றால் நான் அவருக்கு கட்டுப்பட்டவராவோம். 
(ஸரூரத்துல் இமாம் ரூஹானீ கஸாயின் தொகுதி 13, பக்கம் 498)
அன்னார் கூறுகின்றார்கள்:- 
நான் சத்தியமாக கூறுகிறேன் நமது நண்பர் மவ்லவி அப்துல் கரீம் சாஹிப் அறிவுரை கூறும்போது எந்தளவு திருக்குர்ஆனின் அறிவு மற்றும் ஞானத்தை எடுத்துரைப்பார்களோ அதில் ஆயிரத்தில் ஒரு பகுதி கூட இந்த நண்பரின் வாயிலிருந்து வெளிப்படும் என எனக்கு நம்பிக்கை இல்லை. 
(ஸரூரத்துல் இமாம் ரூஹானீ கஸாயின் தொகுதி 13, பக்கம் 500)
அன்னார் கூறுகின்றார்கள்:- 
எனது ஜமாஅத்தில் என்னிடம் பையத் செய்த இறையடியார்களில் ஓர் ஆண்மகன் உள்ளார். அவர் மிகப்பெரிய அறிஞர் ஆவார் அவர் ஹஸ்ரத் ஹக்கீம் ஹாஃபிஸ் ஹாஜீ ஹரமைன் நூருத்தீன் சாஹிப் ஆவார்கள். அவர்கள் அனைத்து தஃப்ஸீர்களையும் தன்னிடத்தில் வைத்திருப்பார்கள். இதேபோன்று அவர்களின் உள்ளத்தில் திருக்குர்ஆனின் ஆயிரக்கணக்கான ஞானங்கள்  பொதிந்துள்ளது. அவர்களுக்குதான் உண்மையில் பையத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு திருக்குர்ஆனின் ஒரு பாகத்தை அறிவு மற்றும் ஞானத்துடன் கற்றுக்கொடுங்கள். இவர்கள் பித்தர்கள் ஒன்றுமில்லையே என்னிடம் பையத் செய்து மற்ற முல்ஹிம்களை வீட்டுவிட்டனர். 
(ஸரூரத்துல் இமாம் ரூஹானீ கஸாயின் தொகுதி 13, பக்கம் 500)
அன்னார் கூறுகின்றார்கள்:- 
அவர் தனது இல்ஹாமிய ஆற்றல் மூலம் திருக்குர்ஆனின் அறிவை முதலில் மவ்லவி நூருத்தீன் சாஹிபிடம் நிரூபிக்கட்டும். அவர் தனது அசாதாரண திறமையினால் நூருத்தீன் போன்ற திருக்குர்ஆன் நேசரிடம் பையத் வாங்கிவிட்டால் பிறகு நானும் எனது அனைத்து ஜமாஅத்தும் அவரிடம்  பையத் செய்கிறோம். 
(ஸரூரத்துல் இமாம் ரூஹானீ கஸாயின் தொகுதி 13, பக்கம் 501)
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:- 
திருக்குர்ஆனின் மற்றும் மார்க்கத்தின் உண்மையான ஞானம் மற்றும் கடமைகளை என்னால் எந்தளவு சொர்ச்செறிவு மற்றும் பொருட்செறிவுடன் எழுத முடியுமோ அவ்வாறு வேறெவறாலும் ஒருபோதும் எழுத முடியாது. முழு உலகமும் இதனை சோதிப்பதற்கு வந்தாலும் நான் தான் வெற்றி பெறுவேன். மேலும் அனைவரும் எனக்கு எதிராக எழுந்தாலும் இறையருளால் தராசில் எனது பக்கமே கனமானதாக இருக்கும். 
(அய்யாமே ஸுலுஹ் ரூஹானீ கஸாயின் தொகுதி 14, பக்கம் 407)
சகோதரர்களே! இறுதியாக சய்யிதுனா ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் மேற்கோளின் சிலவரிகளை எடுத்துரைத்து நான் எனது சொற்பொழிவை நிறைவு செய்கிறேன்.
அன்னார் கூறுகின்றார்கள்:- 
திருக்குர்ஆனின் ஞானம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இறைவார்த்தையின் நுட்பமும் திறந்து கொண்டிருக்கிறது. வானின் அடையாளங்களும், அற்புதங்களும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இஸ்லாத்தின் அழகு, ஒளி மற்றும் அருளுக்குரிய இறைவன் புதிய தோற்றத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றான். யாருக்கு பார்வையுள்ளதோ அவர் பார்க்கட்டும், எவரிடம் உண்மையான உணர்வு இருக்குமோ அவர் தேடட்டும். எவரிடம் சிறிதளவு அல்லாஹ் மற்றும் அவனது ரஸூல் மீதான அன்பு இருக்குமோ அவர் எழுந்து சோதிக்கட்டும். மேலும் இறைவன் தனது புனித கைகளினால் அடிக்கல் நாட்டிய இறைவனது விருப்பமான இந்த ஜமாஅத்தில் இணையட்டும்.  மேலும் தற்போது வஹீ நின்று விட்டது, அடையாளங்கள் வெளிப்பட முடியாது, துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது எனக் கூறுவது அருளுக்குரிய வழியல்ல மாறாக அது அழிவிற்குரிய வழியாகும். இறையருளை மறுக்காதீர்கள். எழுங்கள் ஆய்வுசெய்யுங்கள், பரிசோதியுங்கள். ஒருவேளை சாதாரண அறிவு, சாதாரண சிந்தனை, சாதாரண கூற்றுக்களை பேசக்கூடிய மனிதனாக என்னைக் கண்டால் ஏற்றுக்கொள்ளாதீர்கள். ஆனால் வல்லமையின் அற்புதங்களை பார்த்தால் உண்மையின் ஆதரவாளர் மற்றும் இறைவனுடன் உரையாடுபவரைப் போன்று எனது கையில் பிரகாசம் தென்பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள்.
(பரகாத்து துஆ, ரூஹானீ கஸாயின் தொகுதி 6, பக்கம் 24)
வஆகிரு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

(காதியான் ஆண்டு மாநாடு 2018 அன்று மதிப்பிற்குரிய ஜனாப் மௌலவி மன்ஸூர் அஹ்மது சாஹிப் எடிட்டர் பத்ர் பத்திரிக்கை அவர்கள் ஆற்றிய உர்து மொழி சொற்பொழிவு, தமிழாக்கம்: ஜனாப் மௌலவி N. ஜியாவுல் ஹக் சாஹிப்)

No comments

Powered by Blogger.