ஓர் உண்மை நபிக்கான அளவுகோலும்-ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களும்

ஒரு நபியின் உண்மைக்கு பல அளவுகோல் இருந்தும் ஒரு சில உதாரணங்களை திருக்குர்ஆன் மூலம் நாம் இதில் படம் பிடித்து காட்டியுள்ளோம். அந்த அனைத்து உதாரணங்களும் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அவர்களுக்கு முழுமையாக பொருந்துகிறது என்பதை நிரூபித்துள்ளோம். அன்பான சகோதரர்கள் இதனை வாசித்து நடுநிலையோடு சிந்திக்கவும்.

ஒருவர் தான் ஒரு நபி என வாதம் செய்கிறார் என்றால் அவருடைய முந்திய வாழ்க்கை தூய்மையாக இருக்கவேண்டும் என்பது ஆகும். இந்த அளவுகோல் நாமாக சொல்லும் அளவுகோல் இல்லை மாறாக குர்ஆன் கூறும் முதல் அளவுகோல் ஆகும். இதை அல்லாஹு குரானில் இவ்வாறு கூறுகின்றான்,

குரான் 10:17 ‘’அல்லாஹு நாடியிருந்தால் நான் இதனை உங்கள் முன் ஓதிக்காட்டியிருக்கமாட்டேன். அவன் இதனை உங்களுக்கு அறிவித்திருக்கவும் மாட்டான். நான் இதற்கு முன்னர் உங்களிடையே ஒரு நீண்ட வாழ்நாளை கழித்திருக்கின்றேன். இதன் பிறகும் நீங்கள் ஏன் உணர்வதில்லை?’’


அதாவது நபி –ஸல்- அவர்கள், நபி என வாதிப்பதற்கு முன்பு அதாவது கடந்த காலத்தில், அவர்கள் ஒழுக்கமுடையவராகவும், தூய்மையாளராகவும் விளங்கினார்கள். மக்கள் அன்னாரை உண்மையாளர் என்றும் நேர்மையாளர் என்றும் புகழ்ந்துரைத்தார்கள். ஆனால் தன் 40 ஆவது வயதில் நபி என வாதம் செய்ததால் அவர்களை மக்கள் மிகவும் பொய்ப்படுத்தி இழிந்துரைத்தனர். கடந்த காலத்தில் நேர்மையாளராகவும் உண்மையாளராகவும் இருந்த ஒருவர், 40 ஆவது வயதில், (அதாவது வாழ்நாளில் பெரும்பகுதி கழிந்த பிறகு) இறைவனுடைய விஷயத்தில் எவ்வாறு பொய் கூறுவார்? இதனை தான் 10:17 வசனத்தில் அல்லாஹ், இதன் பிறகும் நீங்கள் ஏன் உணர்வதில்லை?- என்று கேட்கிறான். 

இதேபோலத்தான் அஹ்மத் –அலை- அவர்களும் தனது கடந்த காலத்தில் தூய்மையுடையவர்களாக நேர்மையுடையவர்களாக, இறைபக்தியுடையவர்களாக, குரானின் ஞானமுடையவர்களாக விளங்கினார்கள் என்பது எல்லா மக்களின் ஏகோபித்த கூற்றாகும். ஆனால் ஈஸா நபி இறந்துவிட்டார்கள் என்றும், தன்னை நபி என்றும் இறைவன் அறிவித்ததாக அன்னார் வாதம் செய்தபிறகுதான் மக்கள் அன்னாரை எதிர்க்கத்தொடங்கினார்கள். அவர்கள் நபி என வாதம் செய்த பிறகு அவர்கள் எழுதியுள்ள ஆழமிக்க, அற்புதமான, ஞானங்கள் அடங்கிய அவர்களின் நூல்களை புரிந்து கொள்ள முடியாமல் பலர் அவர்களை ஏளனப்படுத்தி வருகின்றார்கள். அவ்வாறான மக்களுக்கு நாம் விடுக்கக்கூடிய சவால் என்னவென்றால் அவர்கள் நபி என வாதம் செய்வதற்கு முன்பு அவர்கள் எந்த பொய்யையோ, அல்லது நேர்மையில்லாமல் நடந்ததாகவோ அவர்களால் காட்டமுடியுமா? முடிந்தால் காட்டுங்கள். நிச்சயமாக முடியாது. 

அவர்களது எதிரிகள் கூட அன்னாரின் நற்குணங்களைப் பற்றியும், அன்னாரது சேவையை பற்றியும் புகழ்ந்துள்ளார்கள். இது தான் நாம் எடுத்து வைக்கும் முதல் அளவுகோல் ஆகும்.

இதற்கு பதிலாக சிலர் இவ்வாறு  கூறுகின்றனர்:

‘’இது எப்படி அர்த்தமுள்ள அளவுகோலாகும்? தன்னை நபியென சொல்லிக் கொள்வதற்கு முன்பாக நல்லவராக இருந்தால் நம் சொத்தை எழுதி கொடுக்கலாம், நம் வீட்டு பெண்களை அவருக்கு திருமணம் வேண்டுமானால் செய்து வைக்கலாம், நம் வியாபார கணக்கு வழக்கை கவனிக்கும் பொறுப்பை வேண்டுமானால் கொடுக்கலாம், அதுக்காக அந்த நல்ல குணங்களை வைத்துக் கொண்டு நபியாக எப்படி கருத முடியும்?’’ என்று கூறுகின்றனர். 

நமது பதில்::

குரானின் கருத்தின் படி நாம் ஓர் அளவுகோல் எடுத்து வைத்துள்ளோம். அதற்கு குரானின் கருத்தைக் கொண்டு அழகிய முறையில் பதில் சொல்வதை விட்டு விட்டு வரம்பு மீறி விமர்சிக்கின்றார்கள். அவர்கள் இவ்வாறு கூறுவது நபி –ஸல்- அவர்களை கடுமையாக எதிர்த்த மக்கத்துக் காஃபிர்களின் நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது. இவ்வாறு மக்கத்து முஷ்ரிக்குகள் கூறியது போல அவர்களும் அஹ்மத் –அலை- அவர்களின் கண்ணியத்தைப் புரியாமல் ஏளனம் செய்து வருகின்றார்கள். எனவே அவர்கள் இவ்வாறெல்லாம் ஆணவத்தால் கேலி கிண்டல் செய்திருப்பது அஹ்மத் –அலை- அவர்கள் உண்மையாளர் என்பதைதான் வெளிப்படுத்துகிறது.
-------------------------------------------------------------------

நாம் வைக்கும் இரண்டாவது அளவுகோல்,
ஒருவர் கடந்த காலத்தில் எவ்வளவு தான் தூய்மையாக விளங்கினாலும், அவர் தன்னை ஒரு நபியென வாதித்த பிறகு, மக்கள் அன்னாரை பொய்யர், ஏமாற்றுக்காரர், பைத்தியக்காரர், சூனியக்காரர், என்றெல்லாம் தூற்றுவார்கள் என்பதாகும். இதுவும் குரான் கூறும் அளவுகோலாகவே இருக்கிறது. கடந்த காலத்தில் இவ்வுலகத்தில் அவதரித்த அனைத்து தூதர்களையும் மக்கள் எதிர்த்தது மட்டுமல்லாது கேலி கிண்டல், ஏளனம் செய்தல், போன்ற காரியங்களை அவர்களுடன் செய்து வந்திருக்கிறனர். இதனை அல்லாஹ் திருமறை மூலமாக ஹஸ்ரத் ரஸூல் (ஸல்) அவர்களுக்கு மக்கத்து காஃபிர்கள் உம்மை ஏளனம் செய்து கிண்டல் செய்து எதிர்த்து வருகின்றார்கள் என்றால், இதில் நீர் கவலை பட வேண்டிய அவசியமில்லை. இதற்கு முன்பு வந்த தூதர்களையும் இவர்களை போன்றோர்கள் இவ்வாறே செய்து வந்தனர்..ஆனால் இறுதியில் வெற்றி அந்த நல்லடியார்களுக்கே...ஆகவே நீர் கவலை பட வேண்டாம் என்று திருக்குர்ஆனில் ஒரு வாக்குறுதியாக இறைவன் கூறுகின்றான். ஆக இவ்வாறு ஒரு தூதரை ஏளனம் செய்வதும் கூட அவரின் உண்மைத்துவத்தை எடுத்துரைக்கிறது என்பதை இதன் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு பல உதாரணங்களை திருக்குர்ஆன் கூறுவதை பாருங்கள்:

குரான் 7:61 (நூஹ் நபியின்) ‘’சமுதாயத்திலுள்ள பெரியார்கள், நாங்கள் உம்மை பகிரங்கமான வழிகேட்டில் காண்கிறோம் என்றனர்’’

குரான் 7:67 (ஹூத் நபியின்) ‘’சமுதாயத்தின் நிராகரிக்கும் தலைவர்கள், நிச்சயமாக நாங்கள் உம்மை மடமையில் காண்கின்றோம், நிச்சயமாக நாங்கள் உம்மை பொய்யர்களை சேர்ந்தவரென்று நினைக்கின்றோம்’’

குரான் 7:77 (ஸாலிஹ் நபியின் காலத்தில் உள்ள) ‘’கர்வம் கொண்டவர்கள், நீங்கள் நம்பிக்கைக் கொண்டுள்ள அதனை நாங்கள் நிச்சயமாக மறுப்போராவோம் என்றனர்’’

குரான் 27:48 (சமூது சமுதாய மக்கள், ஸாலிஹ் நபியைப் பற்றி) ‘’நாங்கள் உம்மையும் உம்மை சேர்ந்தவர்களையும் கெட்ட சகுனமாக காண்கிறோம்’’

குரான் 07:91 (ஷூஹைபூ நபியின் காலத்தில்) ‘’நிராகரிப்பாளர்களின் தலைவர்கள் நீங்கள் ஷூஹைபை பின்பற்றினால் நிச்சயமாக நஷ்டமடைந்தவராவீர்கள் என்றனர்’’

குரான் 40::24,25 (இஸ்ரவேல் சமுதாய மக்கள்) ‘’மூசாவைத் தெளிவான அடையாளங்களுடனும் தெளிவான அத்தாட்சிகளுடனும் அனுப்பினோம், பிர்அவுன், ஹாமான், காரூன் ஆகியோர்கள் அவரை பொய் சொல்லக்கூடிய சூனியக்காரன் எனக்கூறினர்’’

குரான் 19:47 (இப்ராஹீம் நபியின் தந்தை) ‘‘இப்ராஹீமே, நீர் என் கடவுளை வெறுக்கிறீரா? நீர் விலகிக்கொள்ளவில்லையென்றால், நிச்சயமாக நாம் உம்மை கல்லெறிந்து கொன்றுவிடுவேன்’’. 

தன் மகன் நபி என வாதித்தபோது தந்தைக்கே அதனை புரிந்து கொள்ள முடியவில்லையே ! எனவே இப்ராஹீமின் தந்தை கூட , தனது மகனை கொல்ல முயன்றார் என்றால், அதற்குக் காரணம் அன்னாரின் நபி என்ற வாதம் தானே தவிர, வேறு எந்த காரணமும் இல்லை.

குரான் 23:45 ‘’நாம் நம்முடைய தூதர்களை ஒருவருக்குப் பின் ஒருவராக அனுப்பிக்கொண்டே இருந்தோம் ஒரு சமுதாயத்தினரிடம் அவர்களின் தூதர் வந்த போதல்லம் அவர்கள் அவரை பொய்யாகினார்.

ஆகவே நாம் அவர்களுள் சிலரை, சிலருக்குப் பின்னால் அனுப்பி (அழித்து)க்கொண்டே , இருந்தோம். நாம் அவர்கள் எல்லோரையும் கடந்த கால கதைகளாக்கி வைத்துவிட்டோம். நம்பிக்கைக் கொள்ளாதவர்களுக்கு இறைவனின் சாபம் (உண்டாவதாக)’’

இவ்வாறு பல நபிமார்களை, பல கோணங்களில், பல்வேறு காரணங்களைக் கூறி மக்கள் ஏளனம் செய்தார்கள் என்று திரும்ப திரும்ப குரானில் அல்லாஹு கூறியிருக்கிறான் என்றால் அதற்குரிய காரணம்தான் என்ன என்று நாம் சற்று சிந்திப்போம் என்றால், நமக்கு கிடைக்கும் பதில், இனிமேல் ஒரு நபியும் வரவேண்டிய தேவையில்லை என்றால் குரான் இப்படி திரும்பத் திரும்ப கூறவேண்டியத் தேவையில்லை என்று கூறுவோர்களின் கருத்து தவறே ஆகும், எனவே இந்த வசனங்கள், இனியும் நபி வருவார், அவரை மக்கள் ஏளனம் செய்வார்கள் என்பதை பற்றி எச்சரிக்கை செய்வதற்காகத்தான் என்பது புரிய வருகிறது. அது மட்டுமல்ல அந்த மக்களின் அனைத்து விதமான கேலி கிண்டல் ஏளனத்திற்கு பிறகும் கூட அல்லாஹ்வும் அவனது உண்மையான தூதர்களே வெற்றி கொள்வார்கள் என்பதையும் குர்ஆனில் எடுத்து கூறுகின்றான்...இது நபித்துவ வரலாறில் உண்மை சம்பவமாக இருக்கிறது. அல்லாஹ் கூறுகின்றான்: 

""நானும் என்னுடைய தூதர்களும் நிச்சயமாக வென்று விடுவோம்" என்று அல்லாஹ் விதித்துள்ளான்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க சக்தியுடையவன், யாவரையும் மிகைத்தவன்." (58:22)

மேலும் கூறுகிறான்: 
"நிச்சயமாக, நாம் நம்முடைய ரஸூல்(தூதர்)களுக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும், இவ்வுலக வாழ்க்கையிலும், சாட்சிகள் நிலைபெறும் நாளிலும் உதவி செய்வோம்." (40:51)

இந்த வசனங்களின் அடிப்படையில் அல்லாஹ் அவனது தூதராகிய ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கும், அவர்களின் ஜமாஅத்திற்கும் உதவிக்கு மேல் உதவி வழங்கி கொண்டே செல்கிறான்...இதை அறிந்தும் சிலர், இது என்ன பெரிய விஷயமா? கிருஸ்தவர்களும் கூடதான் வளர்ந்து கொண்டு வருகின்றார்கள்....பல்வேறு காரியங்களை செய்து வருகின்றார்கள் அப்போ அவர்கள் உண்மையாளர்கள் ஆகிவிடுவார்களா? என்ற ஒரு முட்டாள்தனமான கேள்வியை எழுப்புகின்றனர். 

மேலே சொன்ன வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ்வை சாட்சியாக வைத்து அவன் மீது சத்தியம் செய்து ஒருவர் நபி என வாதித்தால் அவர் தனது வாதத்தில் வெற்றி கொண்டால்....அவர் உண்மையான தூதர் அவரின் உண்மையை பற்றியும் அவருக்கும் அவரது ஜமாஅத்திற்கும் ஏற்படும் வெற்றியை பற்றியும்தான் மேலே குறிப்பிட்டுள்ள 58:22 40:51 வசனத்தில் அல்லாஹ் எடுத்து கூறுகிறான்....

ஆகவே கிருஸ்தவர்களின் வளர்ச்சியையும் அதுவும் அவர்கள் வளர்வது உலக விஷயத்தில் இதையும் மார்க்க விஷயத்தில் முன்னேற்ற பாதையில் செல்லும் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தையும்  (பார்க்க: http://tamilahmadiyya.blogspot.in/2015/02/2013.html)  முடிச்சு போட்டு பேசுவது அறிவீனமே அன்றி வேறில்லை.

சிலர் கூறுகின்றனர்: 
‘‘இது என்னப்பா கேலிக்கூத்தாக இருக்கிறது? திட்டு வாங்கிறவனெல்லாம் நபியா? அப்படி பார்த்தால் உலகத்தில் எத்தனையோ மக்களை சிலர் திட்டி போட்டிக்குள் வைத்து வருகின்றனர் அவர்களெல்லாரும் உங்கள் பார்வையில் நபியாகி விடுவார்கள் போலும் என்று கேலி கிண்டலாக கூறி வருகின்றனர்.’’

நமது பதில்: திட்டு வாங்குகிறவனெல்லாம் நபி என்று நாம் எங்கும் எழுதவுமில்லை பேசவுமில்லை. நபி என்று எவர்களெல்லாம் வாதம் செய்தார்களோ அவர்களெல்லாம் தூற்றப்பட்டிருக்கிறார்கள், தூற்றப்பட்டு வந்திருக்கின்றார்கள் என்பது குரானின் அளவுகோலாகும் – என்பதைத்தான் நாம் எடுத்து கூறி வருகின்றோம் இதுதான் உண்மையும் கூட....அது மட்டுமல்ல பலரும் மக்களிடம் திட்டு வாங்கிருக்கலாம் ஆனால் அவர்கள் தனது வாதத்தில் வெற்றி கொள்வதில்லை....ஆனால் அல்லாஹ்வின் வாக்குறுதி என்னவென்றால் உண்மையான தூதர்களை மக்கள் திட்டுவார்கள் ஏளனம் செய்வார்கள் ஆனால் இதற்கு மத்தியிலும் அந்த தூதர்களுக்கு வெற்றியை வழங்குவான். இதுதான் உண்மையான தூதர்களுக்குண்டான அடையாளம்...ஆனால் இவ்வாறு கேள்வி கேட்பவர்கள் இந்த விஷயத்தில் குருடர்களாகவே இருந்துவிடுகின்றனர்.

மேலும் சிலர் எழுதிவருவது என்னவென்றால்: 

‘’இவர் திட்டு வாங்குகிறார் என்றால், திட்டு வாங்குகிற விதமாக நடந்து கொண்டார், எனவே திட்டு வாங்குகிறார். முஹம்மது நபியை காரணமேயில்லாமல் திட்டினார்கள். இரண்டும் சமமாகிவிடுமா?’’ என்று கேட்கின்றனர்.

இதற்கு நமது பதில் என்னவென்றால்:

ஒவ்வொரு நபியையும் ஒவ்வொரு விதமாக ஏளனப்படுத்தினார்கள். ஈஸா நபியையும் அநாகரீகமாக அந்த யூதர்கள் ‘’வேஷி மகன்’’ என்று தூற்றினார்களே, அந்த யூதர்களும் காரணத்தோடு தான் தூற்றினார்கள் என்று இவ்வாறு ஆட்சேபனை செய்பவர்கள் ஒப்புக்கொள்வார்களா ? எனவே காஃபிர்கள் நபியை மறுப்பதற்கு எது வேண்டுமானாலும் பேசுவார்கள் அதற்கு அறவே தயங்கவும் மாட்டார்கள் என்பதற்கு இவ்வாறான மக்களே ஓர் உதாரணமாக இருக்கின்றார்கள். இவர்கள் தனது சுய சிந்தனையை முன் வைத்து சிந்தித்து கேள்வி கேட்கின்றார்களே அல்லாமல் திருக்குர்ஆன் ஹதீஸ் இவ்வாறு சொல்கிறதே என்று இவர்களால் கேள்வி எழுப்பமுடிவதில்லை. இதுவே இவர்களுக்கு திருக்குர்ஆன் ஹதீஸ் ஞானம் குறைவானது என்பதை எடுத்து காட்டுகிறது. 

எனவே நாம் வைத்துள்ள இரண்டாவது அளவுகோலும், குரான் அடிப்படையில் தான் என்பதும், அந்த அளவுகோல் அஹ்மத் –அலை- அவர்களுக்கும் முழுக்க முழுக்க பொருந்துகிறது என்பதும் தெளிவாகிறது.

மேலும் சிலர் இவ்வாறு கூறுகின்றார்கள்:

‘’ஒருவரைப் பார்த்து, இதோ போகிறாரே, அவர் தான் நபி என்று நீங்கள் என்னிடம் சொல்கிறீர்கள். நியாயப்படி நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அதோ போகும் அந்த நபர் இந்தந்த காரணங்களால் நபி என்று காரணங்களை அடுக்கிகூறி, சான்றுகளை முன் வைத்து நிரூபிக்க வேண்டும் அப்போதுதானே அவர் உண்மையான் நபியா பொய்யான நபியா என்பதை எடை போட்டு பார்க்க சரியாக இருக்க முடியும் என்று கேட்கின்றனர்.

நமது பதில்:

இவர்களது இந்த அணுகுமுறை, நபிமார்களைப் பற்றிய அளவுகோலைப் புரிந்துகொள்ளாத வடிகட்டிய முட்டாள் தனமேயல்லாமல் வேறில்லை. குரானின் அடிப்படையில் பார்க்கிறபோது, ஆதம் நபி முதல் நபி –ஸல்- அவர்கள் வரையிலும் தோன்றிய நபிமார்களை, எவராவது introduce பண்ணி வைத்ததாக எந்த ஆதரமாவது உங்களால் எடுத்து வைக்க முடியுமா...? மாறாக மக்கள் கேலி செய்வார்கள் என்று தான் குரான் எடுத்து கூறுகிறது. ஹஸ்ரத் நபி –ஸல்- அவர்களை, இதோ போகிறாரே இவர் தான் நபி என்று எவராவது introduce பண்ணினார்களா? எனவே இவர்களது ஆட்சேபனைகள் காஃபிர்களின் நடைமுறையை தான் படம் பிடித்துக் காட்டுகிறது.

இவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும், ஹஸ்ரத் அஹ்மத் –அலை- அவர்கள் தன்னை நபி என்று வாதித்தார்கள். அவ்வாறு வாதித்துவிட்டு அமைதியாகவா இருந்தார்கள்? அவர்கள் முதன் முதலாக வைத்த வாதம் என்ன? ஈஸா நபி –அலை- அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பது. இங்கு சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தெருவில் போறவரால் ஈஸா நபி  இறந்துவிட்டார் என்று கூறமுடியுமா? அது மட்டுமல்ல ஹஸ்ரத் அஹ்மத் (அலை) ஈஸா நபியின் மரணத்தைப் பற்றி அறிவித்தபோது தன்னுடனே இருந்த நண்பரான புகழ்மிக்க மௌலவி ஹுசைன் பட்டலாவி என்ன கேட்டார் தெரியுமா? என்னிடம் கேட்காமல் ஈஸா நபி இறந்துவிட்டார் என்று ஏன் அறிவித்தீர்கள்? என்று கேட்டார். இந்த நிலைக்கு முன்பு அதாவது ஹஸ்ரத் அஹ்மத் –அலை- அவர்கள் ஈஸா நபியின் இறப்பை அறிவிப்பதற்கு முன்பு வரை இந்தியாவெங்கும் அவரது புகழ் பரவியிருந்தது. ஆனால், அன்னார் ஹுசைன் பட்டாலாவியின் ஆலோசனையை கேட்டிருந்தால், ஈஸா நபி இறந்துவிட்டார் என்ற வாதத்தை அத்தோடு விட்டிருக்கலாம். ஆனால் முஸ்லீம்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்களும் கடுமையாக எதிர்த்தபோதும் அன்னார் தனது வாதத்தில் உறுதியாக இருந்தார்கள். 

இந்தியாவில் ஆங்கிலேயே ஆட்சி நடக்கும்போது, ஆங்கிலேயர்களின் கடவுளாகிய ஈஸா இறந்துவிட்டார், அவர் வானத்தில் உயிரோடு இல்லை, அவர் மீண்டும் அவர் வரமாட்டார், என்று தெருவில் போறவர் எவராவது (இது போன்ற மறைவான விஷயங்களை) அறிவிவிக்க முடியுமா? வந்தே மாதரம் என்று சொன்னாலே ஜெயில் கொடுமை மட்டுமல்ல, நாயை விட கேவலமாக இந்தியர்களை நடத்திய காலகட்டத்தில், ஆங்கிலேயர்களைப் பார்த்து உங்கள் கடவுள் இறந்துவிட்டார் என்று கூறுவதென்பது சாதாரண மனிதரால் கற்பனைக்கூட செய்துபார்க்க முடியுமா?

ஆக அன்னாரின் ஒவ்வொரு வாதமும் உலகில் ஒரு புரட்சியை உண்டுபண்ணிக் கொண்டு இருக்கிறது என்பதை சிந்திக்காமல் ஏளனம் செய்வது காஃபிர்களின் நடைமுறையே அல்லாமல் வேறில்லை என்பதை சற்று நடுத்தர நிலையோடு சிந்தித்து தனது சுய கற்பனைகள், சிந்தனைகளை வைத்து அல்லாஹ்வின் அடியாரை மறுக்க அவசரப்படாமல் திருக்குர்ஆன், ஹதீஸ்களை கொண்டு ஒரு நபியின் உண்மை நிலையை எடை போட்டு பார்க்க வேண்டும். 

இவ்வாறு எடை போட்டு பார்க்கும்போது அல்லாஹ்வின் அருளினால் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) உண்மையிலேயே வாக்களிக்கப்பட்ட மஸீஹ்தான் அவர் நபிதான், தீர்க்கதரிசிதான் என்ற முடிவுக்கு நம்மால் வர முடியும். அல்லாஹ் இதற்கான நல் வாய்ப்பை நம் அனைவருக்கும் வழங்குவானாக. ஆமீன்.

No comments

Powered by Blogger.